நீட் தேர்வு முறைகேடு; உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்!

NEET examination malpractice Affidavit filed in the Supreme Court

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.07.24) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “20 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை சார்ந்த விவகாரம் இது. 67 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். வெளிநாட்டில் தேர்வெழுதுவோருக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது?. நீட் வினாத்தாள் எப்போது தயாரிக்கப்படுகிறது?. எப்போது அச்சிடப்படுகிறது?. வினாத்தாள்களைத் தேர்வு மையங்களுக்கு அனுப்புவது எப்போது?. இது தொடர்பான முழு விவரங்களைத் தேசிய தேர்வு முகமை வழங்க வேண்டும்” என்று ஆணை பிறப்பித்து இந்த வழக்கை 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டிருந்தார்.

NEET examination malpractice Affidavit filed in the Supreme Court

இந்நிலையில் இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை இன்று (10.07.2024) உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், “நீட் தேர்வு ரத்து என்பது தவறிழைக்காத லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அநீதி இழைப்பது போன்று ஆகிவிடும். தேசிய தேர்வு முகமையின் அலுவலகத்தில் தான் நீட் தேர்வு வினாத்தாளுக்கான கேள்விகளை நிபுணர்கள் குழு தயாரிப்பார்கள். வினாத்தாளுக்கான கேள்விகள் எவை என்பது நிபுணர்களுக்கே தெரியாது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகக் கூறி 63 புகார்கள் பதிவாகியுள்ளன. இது தொடர்பான விசாரணையில் 33 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 22 மாணவர்கள் 3 ஆண்டுகள் வரை நீட் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 9 பேரின் முடிவுகளை வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

neet
இதையும் படியுங்கள்
Subscribe