Skip to main content

கிரிப்டோகரன்சி, சமூக வலைதளங்கள் தொடர்பாக உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

narendra modi

 

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், சர்வாதிகாரத்தை எதிர்த்தல், ஊழலை எதிர்த்து போராடுதல், மனித உரிமைகளுக்கான மரியாதையை ஊக்குவித்தல் ஆகிய கருப்பொருள்களில் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டை காணொளி வாயிலாக நடத்தினார். நூறுக்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கிரிப்டோகரன்சி மற்றும் சமூக வலைதளங்கள் தொடர்பாக உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது வருமாறு; இந்த உச்சி மாநாட்டில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். ஜனநாயக உணர்வு என்பது நமது நாகரிக நெறிமுறைகளுக்கு இன்றியமையாதது. பல நூறாண்டு காலனி ஆட்சியால் இந்திய மக்களின் ஜனநாயக உணர்வை அடக்க முடியவில்லை. இந்தியாவின் சுதந்திரத்துடன் அது மீண்டும் தனது முழு வெளிப்பாட்டை பெற்றது. மேலும் கடந்த 75 ஆண்டுகளில் ஜனநாயக தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இணையற்ற ஒரு கதைக்கு வழிவகுத்தது.

 

இது முன்னோடியில்லாத, அனைத்து துறைகளிலும் சமூக-பொருளாதார சேர்க்கை நடைபெற்ற கதை. கற்பனை செய்ய முடியாத அளவில் சுகாதாரம், கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு ஆகியவற்றில் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் நடைபெற்ற கதை. இந்தியக் கதை உலகிற்கு ஒரு தெளிவான செய்தியைக் கொண்டுள்ளது. அரசால் ஜனநாயகத்தை  அளிக்க முடியும், ஜனநாயகம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகம் தொடர்ந்து அளிக்கும்.

 

"இன்றைய கூட்டம் ஜனநாயக நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு சரியான தளத்தை வழங்கியுள்ளது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதிலும், புதுமையான டிஜிட்டல் தீர்வுகள் மூலம் நிர்வாகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதிலும் உள்ள தனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. சமூக ஊடகங்கள் மற்றும் கிரிப்டோகரன்சிகள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய நெறிமுறைகளை நாம் கூட்டாக வடிவமைக்க வேண்டும். அதன்மூலம் அவை ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.

 

பல கட்சி தேர்தல்கள், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சுதந்திரமான  ஊடகம் போன்ற கூறுகள் ஜனநாயகத்தின் கட்டமைப்பு அம்சங்களாகும். எவ்வாறாயினும், நமது குடிமக்கள் மற்றும் நமது சமூகங்களுக்குள் இருக்கும் உணர்வு மற்றும் நெறிமுறைகளே ஜனநாயகத்தின் அடிப்படை பலம். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.