Advertisment

தொடங்கியது நாடு தழுவிய வேலை நிறுத்தம் - வட மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு!

s

Advertisment

மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்தால், பெரிய அளவிலான விவாதங்கள் இன்றி மத்திய அரசு சட்ட மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றிவருகிறது. குறிப்பாக வேளாண் சட்டம் தொடர்பாக இந்தியாவில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்த நிலையிலும், அதனை மத்திய அரசு நிறைவேற்றியது. இதனைக் கண்டித்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராடிவருகிறார்கள். இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில், வேளாண் சட்டம், பெட்ரோல் விலை உயர்வு, அரசுத் துறைகள் தனியார்மயம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, இன்று (27.09.2021) காலை முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பேருந்து போக்குவரத்து எந்த இடையூறும் இன்றி செயல்படுத்தப்படுகிறது. புதுவையில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு முழு அடைப்பு போராட்டத்தில் பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு தங்களின் கடைகள், வணிக நிறுவனங்களை அடைத்துள்ளனர்.

bharat banth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe