ADVERTISEMENT

2024 நாடாளுமன்ற தேர்தல்; பிரதமர் வேட்பாளர் யார்? - ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு!

06:26 PM Aug 31, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக இருந்து வருகிறார். இந்த சூழலில் அண்மையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சில நடவடிக்கைகளால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய பாஜக அரசு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதில்லை என கொள்கை முடிவெடுத்துள்ளதாக அறிவித்த பிறகும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளமும் அதே கோரிக்கையை வலியறுத்தி வருகிறது. இதுதொடர்பாக அண்மையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் தலைமையில் பீகார் மாநில கட்சிகள் பிரதமரை சந்தித்தன. அதேபோல் பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை நடத்தவும், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் மத்திய அரசு மறுத்து வந்த நிலையில், நிதிஷ்குமார், பெகாசஸ் குறித்து கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றதோடு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும் எனவும் தெரிவித்தார். கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவரே இவ்வாறு கூறியது, பாஜகவிற்கு நெருக்கடியாக கருதப்பட்டது.

இந்தநிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், ”நிதிஷ்குமாருக்கு பிரதமராவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் இருக்கிறது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் முதன்மை பொது செயலாளரும் தேசிய செய்தி தொடர்பாளருமான கே சி தியாகி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒருங்கிணைப்பு குழு வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனால் கூட்டணிக்குள் சர்ச்சை எழுந்தது. இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த கே சி தியாகி, 2024 பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்துள்ளார். அதேநேரத்தில் ஒருங்கிணைப்பு குழு வேண்டும் என்ற கோரிக்கையை கே சி தியாகி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர், "தேசிய ஜனநாயக கூட்டணி சீராக செயல்படுவதை உறுதி செய்ய, தேசிய அளவில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார். மேலும் உத்தரபிரதேச தேர்தலில் கூட்டணி அமையாவிட்டால் தனித்து போட்டியிடுவோம் எனவும் கே சி தியாகி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT