பாஜக தலைவர் நட்டா,மேற்குவங்க மாநிலத்திற்குச் சென்றுள்ள சூழலில், அங்கு அவரின் பாதுகாப்பு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களுக்குப் புதிய பொறுப்பாளர்களை அண்மையில் பாஜக நியமித்தது. இதனைத்தொடர்ந்து, பாஜக தலைவர் நட்டா தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில், 120 நாட்கள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்தவாரம் உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து அவர் தனது பயணத்தைத் தொடங்கினார்.
இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக இன்று மேற்குவங்கத்தின் டயமண்ட் ஹார்பர் பகுதிக்கு அவர் சென்றார். அப்போது நட்டாவின் கான்வாயில் வந்த பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பல கார்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதலில் பாஜக தலைவர்கள் சிலரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மம்தா பானர்ஜி அரசாங்கத்தின் பாதுகாப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகவும், இந்த தாக்குதலுக்குக் காரணம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிதான் எனவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்புக் குறைபாடு நடந்தது தொடர்பாக மேற்கு வங்க அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. "நான் இந்தக் கூட்டத்திற்கு இங்கு வந்ததே துர்காதேவியின் அருளால் தான்" என்று நட்டா கூறியுள்ளார்.