mumbai sion hospital corona treatment ward

Advertisment

கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் யாரும் வாங்க முன்வராததால் இறந்தவர்களின் உடல்களுக்கு மத்தியில் கரோனா பாதித்தவர்களுக்குச் சிகிச்சையளித்து வருகிறது மும்பை மருத்துவமனை ஒன்று.

கரோனா வைரஸால் இந்தியாவில் 52,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் யாரும் வாங்க முன்வராததால் இறந்தவர்களின் உடல்களுக்கு மத்தியில் கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளித்து வருகிறது மும்பை மருத்துவமனை ஒன்று.

மும்பை நகராட்சியினால் நடத்தப்படும் சியான் மருத்துவமனையில், கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அதே வார்டின் அருகிலேயே சுமார் 7 இறந்த உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்குப் பணியாற்றும் ஊழியர்களும் இதுகுறித்து பெரிதாக ஏதும் கண்டுகொள்ளாமல் தங்களது பணிகளை வழக்கம் போலச் செய்து வந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து சியான் மருத்துவமனை டீன் பிரமோத் இங்காலே அளித்துள்ள விளக்கத்தில், "மார்ச்சுவரியில் 15 பிணங்கள்தான் வைக்க முடியும். 11 பிணங்கள் ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ளன, மேலும் மற்ற நோய்களில் இறந்தவர்களுடன் கரோனாவால் இறந்தவர்களின் உடலை வைப்பதும் கஷ்டம். அதுமட்டுமல்லாமல் கரோனாவினால் பலியானோர் உடல்களை வாங்க அவர்களது உறவினர்கள் மறுக்கின்றனர். அங்கிருந்த உடல்கள் தற்போது அகற்றப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.