Skip to main content

பங்குச் சந்தையைத் தாக்கிய இந்தியா- சீனா எல்லைத் தகராறு! ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகம்!!

Published on 17/06/2020 | Edited on 17/06/2020

 

mumbai sensex, nifty india - china issues


பங்குச்சந்தை ஆய்வாளர்கள் கணித்தபடியே, செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) தேசிய பங்குச்சந்தையான நிப்டியில் வர்த்தகம் தொடங்கியபோது, 10,000 புள்ளிகளைக் கடந்தது. இதனால் முதலீட்டாளர்களிடையே புத்துணர்ச்சி ஏற்பட்டாலும், அந்த மகிழ்ச்சி அடுத்த மூன்று மணி நேரம் கூட தாக்குப்பிடிக்கவில்லை. எல்லையில் இந்தியா- சீனா ராணுவத்தினர் குவிப்பால் பதற்றம் ஏற்பட்டது. இது, இந்தியப் பங்குச்சந்தைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

 

அடுத்த இரண்டு மணி நேரத்தில் நிப்டி 9,728.50 புள்ளிகள் வரை சர்ரென்று சரிந்தது. இந்திய வீரர்கள் மூவர் மரணம் அடைந்த செய்தி வெளியானதால், முதலீட்டாளர்கள் லாப நோக்கில் தங்களிடம் இருந்த பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர். ஒருகட்டத்தில் வாங்குவோரைக் காட்டிலும் பங்குகளை விற்போர் மூன்று மடங்குக்கும் மேல் அதிகரித்தனர். 

 

எல்லை விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம் என்று சீனா கூறியதுடன், எல்லையில் இருந்து இரு நாட்டுப் படைகளும் திரும்ப அழைக்கப்பட்டன. இதனால் ஓரளவு பதற்றம் தணிந்தது. பின்னர் வர்த்தக நேரம் முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இருந்து நிப்டி இண்டெக்ஸ் மீண்டும் படிப்படியாக உயர்ந்தது. வர்த்தக நேர முடிவில், 9,914 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது, திங்கள் கிழமை வர்த்தகப் புள்ளிகளைக் காட்டிலும் 100.30 புள்ளிகள் உயர்வு ஆகும்.
 

mumbai sensex, nifty india - china issues


நிப்டியில் ஹெச்.டி.எப்.சி. வங்கிப் பங்குகள் நேற்று 4.14 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. ஹெச்.டி.எப்.சி. பங்குகள் 3.90 சதவீதம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிப் பங்குகள் 3.41 சதவீதம், ஜிண்டால் ஸ்டீல் 2.86 சதவீதம், ஹிண்டால்கோ பங்குகள் 2.78 சதவீதம் வரை விலை உயர்ந்தன. டாடா மோட்டார்ஸ் அதிகபட்சமாக 5.87 சதவீதம் வரை சரிந்தன. இன்பிராடெல், இண்டஸ் இந்த் வங்கி, டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி பங்குகளும் லேசான சரிவைச் சந்தித்தன. மொத்தத்தில் நேற்றைய வர்த்தகத்தில் 24 பங்குகள் ஏற்றத்திலும், 26 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகம் ஆயின. 

 

மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ், திங்களன்று 33,228 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்து இருந்தது. நேற்று (ஜூன் 16) சென்செக்ஸின் துவக்கமே 33,853 புள்ளிகளில் தொடங்கி, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை அளித்தது. இந்தியா- சீனா நாடுகளிடையேயான பதற்றம், சென்செக்ஸிலும் எதிரொலித்தது. 

 

ஒரு கட்டத்தில், 34,022 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ், பின்னர் மதியம் 1.15 மணியளவில் 32,953 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்தது. இறுதியில் 33,605.22 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது, முந்தைய வர்த்தக புள்ளிகளைவிட 376 புள்ளிகள் உயர்வு என்பதால், முதலீட்டாளர்களிடையே நேர்மறையான நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. சென்செக்ஸில் 15 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 15 நிறுவனப் பங்குகளின் மதிப்புகள் இறக்கத்திலும் வர்த்தகம் ஆயின. 

 

புதன்கிழமை வர்த்தகத்தில் கவனிக்க வேண்டியவை:

 

நிப்டி 9,728 புள்ளிகளாகச் சரிந்து, பின்னர் ஏற்றம் கண்டிருப்பது என்பது நிப்டியில் காளையின் ஆதிக்கம் தொடரும் என்பதையே காட்டுகிறது என்கிறார்கள், நிபுணர்கள். ஹெச்.டி.எப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தீபக் ஜசானி, நேற்றைய வர்த்தகத்தில் இண்டெக்ஸ் 9,720 புள்ளிகளாகச் சரிந்தாலும்கூட, கடைசி இரண்டு அமர்வுகளில் படிப்படியாக ஏற்றம் கண்டுள்ளது. இது, நிப்டி வலுவான நிலையில் இருப்பதைக் காட்டுகிறது என்கிறார்.

 

ரேலிகர் பங்குத்தரகு நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் அஜித் மிஸ்ரா, நிப்டி இண்டெக்ஸ் ஒரு கட்டத்தில், 10,050 புள்ளிகள் வரை உயர்ந்தது, பங்குகள் வரும் காலத்தில் ஆதாயம் தரும் என்ற நம்பிக்கை அளிக்கக் கூடியதாகும். அதேநேரம், உலக பங்குச்சந்தைகளின் கள நிலவரமும் இந்தியப் பங்குச்சந்தைகளில் அவ்வப்போது எதிரொலிக்கும்,'' என்றார். 
 

mumbai sensex, nifty india - china issues


கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் கட்ட அலையால், அமெரிக்க பங்குச்சந்தைகள் கடந்த சில நாள்களாக தொடர்ந்து சரிவு கண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கணிசமான ஏற்றம் கண்டது. ஜெனரிக் மருந்துகள் மூலம் கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்ற தகவல் பரவியதால், முதலீட்டாளர்களிடையே சந்தை மீது ஆர்வம் அதிகரித்ததால், முதலீடுகளைக் கொட்டினர். இதனால் அமெரிக்க பங்குச்சந்தைகள் 759.62 புள்ளிகள் வரை (2.95 சதவீதம்) உயர்ந்துள்ளது. அமெரிக்க சந்தைகள் ஏற்றம் பெற்றதன் எதிரொலியாக, ஐரோப்பிய பங்குச்சந்தைகளிலும் 2.7 சதவீதம் வரை முன்னேற்றம் ஏற்பட்டது. 

 

இந்தியா- சீனா எல்லை தகராறு, அமெரிக்க சந்தைகளில் நிலவும் ஏற்ற, இறக்கம் காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகளிலும் இம்மாதம் முழுவதும் நிலையற்ற தன்மை காணப்படும் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள். என்றாலும், குறிப்பிட்ட சில பங்குகளில் காளையின் ஆதிக்கம் தொடரும் என்றும் கணித்திருக்கிறார்கள். 


அதன்படி, பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், பாலாஜி அமின்ஸ், கிரி இண்டஸ்ட்ரீஸ், பாரத் டைனமிக்ஸ், லூமாக்ஸ் ஆட்டோ டெக்னாலஜிஸ், பாலாஜி டெலிபிலிம்,  நியூலேண்ட் லேபரட்டரீஸ், பேயர் கிராப்சயின்ஸ், சவுத் வெஸ்ட் பின்னாக்கிள், 3எம் இண்டியா ஆகிய பங்குகள் ஆதாயம் தரக்கூடியவை என்கிறார்கள்.


சரிவில் உள்ள பங்குகள்:


புதன்கிழமை வர்த்தகத்தின்போது, பின்வரும் பங்குகள் சரிவைச் சந்திக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அவை...

 

http://onelink.to/nknapp


டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், எல் அண்டு டி, டெக் மஹிந்திரா, கிளென்மார்க் பார்மா, டாடா ஸ்டீல் பிஎஸ்எல், நோசில் லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஜினியர்ஸ் இண்டியா, எஸ்ஜேவிஎன் லிமிடெட், கேஸ்ட்ரால் இண்டியா, டோரண்ட் பவர், சிட்டி யூனியன் வங்கி, ஹெச்டிஎப்சி ஏஎம்சி, ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஹிந்துஸ்தான் மோட்டார், டேக் சொல்யூஷன்ஸ், டிரெண்ட், எஸ்ஆர்எப், ஜேகே லட்சுமி சிமெண்ட், மிர்ஸா இண்டர்நேஷனல், டிசிஎம் ஸ்ரீராம், சுதர்சன் கெமிக்கல்ஸ் மற்றும் பால்மெர் லாரீ ஆகிய பங்குகள் சரிவைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.

mumbai sensex, nifty india - china issues


எந்தப் பங்குகளை வாங்கலாம்?:


காவேரி சீட், டாடா கம்யூனிகேஷன்ஸ், எம்.ஓ.ஐ.எல்., தானுகா அக்ரி மற்றும் ரேலீஸ் இண்டியாக ஆகிய பங்குகள், கடந்த 52 வார உச்ச நிலையை அடைந்துள்ளன. அதனால் இப்பங்குகள் அனைத்தும் மேலும் விலை உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் உள்ளதால், இன்றைய வர்த்தகத்திலும் இவற்றுக்குக் கணிசமான வரவேற்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

“யாத்திரைக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன” - ராகுல் காந்தி 

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதனையொட்டி ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள பாலாசாகேப் தாக்கரேவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் காரணமாக நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறப்பட்டிருந்தது.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்நிலையில் இந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “யாத்திரையின் போது அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டேன். இந்த யாத்திரை பயணத்தில் பார்த்த அனைத்தையும் ஒரே மேடையில் பேசிவிட முடியாது. இந்த யாத்திரையை முடக்க மத்திய அரசு சார்பில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டன. இந்த யாத்திரைக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன. நாம் ஒரு அரசியல் கட்சிகளுக்கு எதிராகத்தான் போராடுகிறோம் என்கிறார்கள். அது உண்மை அல்ல. இந்து தர்மத்தில் அதிகார மையம் என்ற வார்த்தை உண்டு. நாங்கள் அதற்கு எதிராகத் தான் போராடுகிறோம். அது என்ன அதிகார மையம் என்பது தான் கேள்வி. மணிப்பூரில் மோதலை ஏற்படுத்தியது அந்த அதிகார மையம் தான். அதுதான் நம் நாட்டையும் சீர் குலைக்க முயற்சிக்கிறது. பா.ஜ.க.வால் இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியவில்லை. ஆனால் ஒரு திருமணத்துக்காக பத்தே நாட்களில் சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கினார்கள்” எனப் பேசினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகள். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி விரைவில் முறியடிக்கும்.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்தியா கூட்டணியால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, இந்த கூட்டணிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பா.ஜ.க. ரூ. 8 ஆயிரத்து 250 கோடியை குவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பா.ஜ.க.வை தோற்கடிப்பது தான். பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.