Skip to main content

ஆதாயம் தரும் பங்குகள் எவை எவை? ஜூன் 19ல் என்ன நடக்கும்?

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

mumbai sensex nifty


உலகளவில் பங்குச்சந்தைகளில் நிலையற்றத்தன்மை காணப்பட்டாலும், நேற்று இந்தியப் பங்குச்சந்தைகளில் நிப்டி, சென்செக்ஸ் இரண்டுமே ஏற்றத்தில் வர்த்தகம் ஆயின. இன்றும் (ஜூன் 19) அதன் தொடர்ச்சி இருக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். 

 

ரிலையன்ஸ் ஜியோவுக்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள், அரசுக்கு பகிர்வுத்தொகை செலுத்துதல் மற்றும் அவற்றின் சீர்செய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆர்) தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுக்கு பகிர்வுத் தொகை செலுத்துவதற்கு அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம். இதனால் டெலிகாம் நிறுவனங்களும், அவற்றுக்குக் கடன் வழங்கிய வங்கிகளும், நிதிசார் நிறுவனங்களும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டன.

 

இதையடுத்து நேற்று சென்செக்ஸ், நிப்டி இரண்டிலுமே வங்கிகள், நிதிச்சேவை நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டிருந்தன. டெலிகாம் நிறுவனங்களின் பங்குகளும் வர்த்தகத்தின் பிற்பகுதியில் பெரிய அளவில் சரிவைச் சந்திக்கவில்லை.

 

ஜியோஜித் நிதிச்சேவை நிறுவன ஆராய்ச்சிப்பிரிவுத் தலைவர் வினோத் நாயர், ''ஏ.ஜி.ஆர். மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய அவகாசம், வங்கிப் பங்குகள், தொலைதொடர்பு நிறுவனப் பங்குகளின் விலையேற்றத்துக்கு உதவும். அதனால்தான் வியாழக்கிழமை பங்குச்சந்தைகளில் கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளின் பங்குகளுமே நேர்மறை வளர்ச்சி கண்டிருந்தன. இப்போதுள்ள உலக அரசியல் நிலவரங்கள், அது தொடர்பான தகவல்கள் எல்லாமே குறிப்பிட்ட துறைகளின் பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனினும், எச்சரிக்கை தேவை,'' என்கிறார்.

 

ரேலிகர் பங்குத்தரகு நிறுவன துணைத்தலைவர் அஜித் மிஸ்ரா, இந்தியா- சீனா நாடுகளிடையே ஏற்பட்டுள்ள விவகாரம், அது தொடர்பாக உலகச்சந்தைகளில் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் வர்த்தகர்கள் பங்குகளைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்,'' என்கிறார்.

 

கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஸ்ரீகாந்த் சவுகான், ''நிப்டி நீண்ட காலத்திற்கு 10,350 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம் ஆவதும் முதலீட்டாளர்களுக்கு ஒரு வகையில் பாதுகாப்பற்றதுதான். அந்நிலை தொடர்ந்தால், நிப்டியை கரடி மெல்ல மெல்ல கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும். 

mumbai sensex nifty

இப்போதுள்ள நிலையில் நிப்டி 10140 முதல் 10180 புள்ளிகள் வரை வர்த்தகம் ஆகிக் கொண்டிருக்கும்போதே பல வாரங்களின் அடிப்படையில் கையிருப்பில் உள்ள பங்குகளில் ஒரு பகுதியை விற்று லாபம் பார்த்துவிடுவது நல்லது,'' என முதலீட்டாளர்களுக்கு யோசனை சொல்கிறார். 

 

நிப்டியில் காளையின் ஆதிக்கம்:
 

கரோனா வைரஸின் இரண்டாம்கட்ட அலையால் அமெரிக்க, ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் நிப்டி ஓரளவு ஸ்திரமாக இருக்கிறது என்கிறார்கள். அடுத்த 20 நாள்களுக்கு நிப்டி, காளையின் பிடியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ஓரளவு ஆதாயம் கிடைக்கும் என்கிறார்கள். நிப்டி குறைந்தபட்சமாக 9,800 புள்ளிகள் வரையிலும், அதிகபட்சமாக 10,300 புள்ளிகள் வரையிலும் செல்லக்கூடும் எனத் தெரிகிறது.

 

ஆதாயம் தரும் பங்குகள்:
 

பங்குச்சந்தையில் குறிப்பிட்ட பங்குகளில் கவனம் குவிதலும், விரிதலும் இயல்பானவை. நேற்றைய வர்த்தகத்தில் சில நிறுவனப் பங்குகள் பெரும் ஆதாயம் அளித்துள்ளன. அப்பங்குகளில் மேலும் முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதன்படி, பிஹெச்இஎல், ஆக்சிஸ் வங்கி, வேதாந்தா, ஐடிஐ, ஹெச்டிஎப்சி வங்கி, மேக்மானி ஆர்கானிக்ஸ், எம்எம்டிசி, மிஷ்ரா தாட்டு நிகாம், ஹிந்துஸ்தான் காப்பர், ஹெர்குலஸ் ஹாய்ஸ்ட்ஸ், பிஇஎம்எல், நவபாரத் வென்ச்சர்ஸ், ஸ்டார் பேப்பர் மில்ஸ், டி&லிங்க் (இண்டியா), இகரஷி மோட்டார்ஸ், சிட்டி யூனியன் வங்கி, ஜேகே லட்சுமி சிமெண்ட், இந்திரபிரஸ்தா, எம்எஸ்டிசி, ஆஸ்¢ட்ரால் பாலி டெக்னிக், ஜீனஸ் பேப்பர் அன்டு போர்ட்ஸ், எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ், டிவி டுடே நெட்வொர்க், ஸ்கிப்பர், உகல் பியூயல் சிஸ்டம், ஹிந்துஸ்தான் மீடியா, பாக்யாநகர் பிராப்பர்டீஸ், ஜே குமார் இன்பிராபுராஜக்ட் ஆகிய பங்குகள் ஆதாயம் அளிக்கலாம் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டும் பங்குகள்:
 

ஐடிஐ, முத்தூட் பைனான்ஸ், வைபவ் குளோபல், ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், அதானி கிரீன் எனர்ஜி ஆகிய பங்குகள் 52 வார உச்சத்தைத் தொட்டதால், அப்பங்குகளில் முதலீடு செய்ய வர்த்தகர்கள் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர்.

 

காளை செண்டிமென்ட்:
 

http://onelink.to/nknapp


பிஎஸ்இயில் நேற்று வர்த்தகமான பங்குகளில் 464 பங்குகள் உச்ச விலையைத் தொட்டு, 500 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் ஆனது. இதனால், முதலீட்டாளர்களிடையே காளையின் ஆதிக்கம் தொடரலாம் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதி எச்சரிக்கை.... சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Dada threat to Salman Khan

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.