போக்குவரத்து நெரிசல் மிக்க மும்பை நகரின் சாலைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் காத்திருப்பது வாடிக்கையே. அப்படிப்பட்ட நேரங்களில் வாகனங்களில் அமர்ந்திருப்பவர்கள் தொடர்ந்து தங்கள் வாகனத்தின் ஹாரனை அழுத்திக்கொண்டே இருப்பது, அந்நகரில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. இந்த ஹாரன் சத்தங்களால் ஏற்பட்ட ஒலி மாசினை கட்டுப்படுத்தவும், சிக்னலில் நிற்பவர்கள் ஹாரன் மீதிருந்து தங்களின் கைகளை எடுக்கவும் மும்பை போலீஸ் புதிய திட்டம் ஒன்றை கையிலெடுத்துள்ளனர்.
மும்பை போலீஸின் இந்த திட்டப்படி மும்பையின் நெரிசல் மிகுந்த சில சிக்னல்களில், சிக்னல் விளக்குகளுடன் ஒலி அளவிடும் கருவி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. சிவப்பு விளக்கு எறிந்த பின்னர் அங்கிருக்கும் ஒலி அளவை தொடர்ந்து கண்காணிக்கும் அந்த கருவி, மக்களின் ஹாரன் ஒலியால் ஏற்படும் இரைச்சல் எப்போது 85 டெசிபலை தாண்டுகிறதோ, அப்போது தானாகவே டிராபிக் சிக்னலின் நேரத்தை ரீசெட் செய்கிறது. இதன் காரணமாக மக்கள் மேலும் 90 வினாடிகள் வரை சிக்னலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
மக்கள் ஹாரன் அடிக்காமல் இருந்தால் வழக்கமான கால இடைவெளியில் சிவப்பு விளக்கு பச்சையாக மாறிவிடும், ஒருவேளை மக்கள் அதிகப்படியான ஹாரன் சத்தம் எழுப்பி இரைச்சலில் அளவை 85 டெசிபலுக்கு மேலாக உயர்த்தினால், மேலுமொரு 90 வினாடிகள் அவர்கள் சிக்னலில் நிற்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த புதிய நடைமுறையின் காரணமாக மக்களின் போக்கு விரைவில் மாறும் என காவல்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.