இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த திங்கள் அன்று கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், இதன் விளைவாக முகேஷ் அம்பானி ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
![mukesh ambani loses his position as asias richest person](http://image.nakkheeran.in/cdn/farfuture/Nqt0G9n6pAP_Mib-Yyw_xNGxr6sXwf3FP577L32BElg/1583904805/sites/default/files/inline-images/xgfnxgfngf.jpg)
கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி தீவிரமடைந்து வரும் சூழலில் கச்சா எண்ணெய் விலையும் சர்வதேசச் சந்தையில் 30% வரை சரிந்துள்ளது. இந்நிலையில், இந்தியப் பங்குச்சந்தை 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திங்கள் அன்று ஒரே நாளில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. குறிப்பாகக் கச்சா எண்ணெய் விலை சரிவைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் சுமார் 580 கோடி டாலர் அளவுக்குச் சரிந்தது. கடந்த 11 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் சந்தித்த மிகப்பெரிய சரிவு இதுவே ஆகும். இதன் காரணமாக ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திலிருந்த அம்பானி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அலிபாபா குழும நிறுவனர் ஜாக்மா 4,450 கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தற்போது இவரது சொத்து மதிப்பு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை விட 260 கோடி டாலர் அதிகமாகும்.