su venkatesan

Advertisment

இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகளில் ஒன்று யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா. இந்த வங்கியின் பொதுமேலாளர் நவராத்திரியை ஒட்டி ஆடை தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளார். அது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொது மேலாளர்அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஊழியர்கள் நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும் ஒன்பது வண்ண ஆடைகளை அணிந்து பணியாற்றும் இடத்திற்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், அக்டோபர் 7ஆம் தேதியான வியாழனன்று மஞ்சள் வண்ண உடை அணிந்து வர வேண்டும் எனவும், அதற்கடுத்த நாள் பச்சை வண்ண உடை அணிந்து வர வேண்டும் எனவும், அடுத்தடுத்த நாட்களில் வரிசையாக க்ரே, ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு, ராயல் ப்ளூ, பிங்க், ஊதா ஆகிய வண்ண உடைகளை அணிந்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

bank circular

Advertisment

மேலும் இந்த விதிமுறை கடைப்பிடிக்காவிட்டால் 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனும் இந்த சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பொது மேலாளர் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்? யார் இவருக்கு அதிகாரம் தந்தது! அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்து மீறல். உடனடியாக உத்தரவை திரும்பப்பெறு" என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மைய அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் (நவீன மயம்) ஏ.ஆர். ராகவேந்திரா என்பவர் இப்படி ஒரு சுற்றறிக்கையை 01.10.2021 அன்று வெளியிட்டுள்ளார். நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் உடை கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமாம். விடுமுறை நாளாக இருந்தாலும்... யார் இவருக்கு அதிகாரம் தந்தது! ஊழியர் விதிமுறைகளில் எந்த சரத்தின் கீழ் இந்த சுற்றறிக்கையை அவர் விடுத்துள்ளார்?

Advertisment

நவராத்திரியை நம்பிக்கையுள்ளவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அது அவர்களின் விருப்பம், தனிப்பட்ட உரிமை. ஆனால் எல்லோரும் கொண்டாடியாக வேண்டும், இன்ன நிறத்தில் உடை உடுத்த வேண்டுமென்று என்று கட்டாயப்படுத்துவது அதிகார மீறல்; அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்துமீறல்.

நிதி அமைச்சகம், யூனியன் வங்கி சேர்மன் உடனடியாக தலையிட வேண்டும்! சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும்! சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!”

இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.