Skip to main content

நம்பிக்கையில்லாத் தீர்மானம்; ராகுல் காந்தி இன்று உரை

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

Motion of No Confidence Rahul Gandhi speech

 

கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து தற்போது வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக நடைபெறவில்லை. நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

 

இதனிடையே எதிர்க்கட்சிகள் அனைவரும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேற்று மக்களவையில் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு துணைத் தலைவர் காங்கிரஸ் கௌரவ் கோகோய் எம்.பி. விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆகியோர் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாத்தில் கலந்து கொண்டு பேசினர்.

 

அதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் இந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்து கொண்டு பேச உள்ளார். இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், "ராகுல் காந்தி இன்று மதியம் 12 மணிக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசுவார்" என தெரிவித்துள்ளார். நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது நாளை (10.8.2023) பிரதமர் மோடி விளக்கமளிக்கவுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்