
பெற்ற தாயே தனது 10 வயது குழந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கே அருகே சூட்கேஸ் ஒன்று மர்மமான முறையில் கிடந்துள்ளது. இதனை கண்ட அங்கிருப்பவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர். அதில், சிறுவனது உடல் வெட்டிக் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டுகளாக கிடந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை செய்யப்பட்ட சிறுவனின் பள்ளிப் பையை, குற்றம் நடந்த இடத்தில் போலீசார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், அந்த சிறுவனின் பெயர் மிருன்மோய் பர்மன் (10) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, மருன்மோய் பர்மனின் தாய் தீபாலி ராஜ்போங்ஷியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனது மகன் காணாமல் போனதாகக் கூறியுள்ளார். தீபாலியிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதையடுத்து அவர் தனது குழந்தையை தனது ஆண் நண்பரோடு சேர்ந்து கொலை செய்ததாகக் கூறினார்.
குவஹாத்தி பகுதியைச் சேர்ந்தவர் தீபாலி ராஜ்போங்ஷி. இவரது கணவர் பிகாஷ் பர்மன். இந்த தம்பதிக்கு 5ஆம் வகுப்பு படிக்கும் மிருன்மோய் பர்மன் (10) என்ற ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தீபாலிக்கும், ஜோதிமோய் ஹாலோய் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தீபாலி, தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த சூழலில், தீபாலியும் ஜோதிமோயும் குழந்தையைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, குழந்தை மிருன்மோய் பர்மனை கொடூரமாகக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து சாலையில் போட்டுள்ளனர். என்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை கொலை செய்த இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.