The mother involved in the incident between children

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பின் அருகில் குழந்தைகளுக்கென்று விளையாடுவதற்காக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த இரண்டு சிறுவர்களுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

உடனே அதில் ஒரு சிறுவன், தனது தாயாரிடம் நடந்தவற்றை கூறியுள்ளான். இதையடுத்து அங்கு வந்த அந்த சிறுவனின் தாயார், மற்றொரு சிறுவனை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதன் பின்னர் அவர், அந்த சிறுவனின் தயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இதனை கண்டு ஆத்திரமடைந்த அந்த பெண், வீடியோ எடுத்த நபரை கடுமையாக தாக்கினார்.

அந்த சிறுவனின் தாயார், பூங்காவில் மற்றவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், அந்த பெண் மீது போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.