Skip to main content

சீண்டிய பிரதமர்; பாஜகவை பதறவைத்த அசோக் கெலாட்!  

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

most crimes against women are happening in BJP-ruled states says Ashok Kelat

 

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இரு பழங்குடியினப் பெண்கள் ஆடைகள் கலைக்கப்பட்டு, வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்டு பலரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இது தொடர்பான வீடியோ கடந்த 19 ஆம் தேதி வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மே 3 ஆம் தேதி துவங்கி கலவரம் நடைபெற்று வந்த நிலையில், பிரதமர் மோடி இந்த விஷயம் குறித்து பேச வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் கலவரம் நடந்து 78 நாட்கள் கழித்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளான ஜூலை 20 ஆம் தேதி பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார். 

 

அப்போது அவர், “இந்த சம்பவம் எனது மனதை மிகவும் வேதனையடையச் செய்தது. இந்தச் சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், குற்றவாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தப்பக் கூடாது” என்று தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மணிப்பூரைப் பற்றி 78 நாட்களுக்குப் பிறகு வாய் திறந்த மோடி அரசியல் உள்நோக்கத்தோடு, காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களைப் பற்றிப் பேசியுள்ளார் என்று விமர்சித்தனர். 

 

most crimes against women are happening in BJP-ruled states says Ashok Kelat
அசோக் கெலாட்


 

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களே பெண்களுக்கு எதிரான குற்றத்தில் முதலிடத்தில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

 

அவரது ட்விட்டர் பதிவில், “பா.ஜ.க-வுக்கு கசப்பான உண்மையாக இருந்தாலும் என்.சி.ஆர்.பி தரவுகளின்படி...

1. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக ஆளும் மாநிலங்களான அசாம், ஹரியானா, மத்திய காவல் துறையின் கீழ் இருக்கும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களே முதல் 5 இடத்தில் உள்ளன.

2. பாஜக ஆளும் மாநிலமான மத்தியப்பிரதேசத்தில் தான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடந்துள்ளன. 

3. கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் பாஜக ஆளும் உத்திரப் பிரதேசம் தான் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. 

 

 

most crimes against women are happening in BJP-ruled states says Ashok Kelat
யோகி - நரேந்திரமோடி

 

4. குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ குற்றங்களில் மத்தியப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. அதில் ராஜஸ்தான் 12வது இடத்தில் உள்ளது. 

5. 2019 என்.சி.ஆர்.பி தரவுகளுடன் ஒப்பிடும்போது, 2021 என்.சி.ஆர்.பி தரவுகளின் அடிப்படையில், ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 5% குறைந்துள்ளது. அதேசமயம், பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப்பிரதேசம், ஹரியானா, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குற்றங்கள் அதிகரித்துள்ளன. 

6. மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமையை உலகமே பார்த்தது.  

7. ஜோத்பூர் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளே ஏ.பி.வி.பி. நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள்தான்.  

8. கட்டாயம் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் எனும் சட்டம் இருக்கும் ராஜஸ்தானில் 2019-ஐ ஒப்பிடுகையில் 2021ல் 5% குற்றங்கள் குறைவாகப் பதிவாகியுள்ளன. ஆனால், மத்தியப் பிரதேசம், ஹரியானா, குஜராத், உத்தரகாண்ட், யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 17 மாநிலங்களில் குற்றங்கள் அதிகமாகப் பதிவாகியுள்ளன. 

 

most crimes against women are happening in BJP-ruled states says Ashok Kelat
ராஜஸ்தான் போலீஸ்


ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முழுமையாக விசாரிக்கப்படுகிறது. போலீஸும் கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. மணிப்பூர் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப, மத்திய மற்றும் மாநில பாஜக தலைவர்கள் ராஜஸ்தானுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.


இந்த அவதூறு முயற்சியை ராஜஸ்தான் சகித்துக் கொள்ளாது. ராஜஸ்தானியர்களை இழிவும், அவமானமும் செய்ய முயற்சிக்கும் பாஜகவிற்கு நேரம் வரும்போது ராஜஸ்தான் மாநில மக்கள் பதிலளிப்பார்கள்.” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.