modi wishes mahinda rajapaksa on election results

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள மஹிந்த ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத்தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

Advertisment

இலங்கை நாடாளுமன்றத்தில் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருந்த சூழலில், ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பே அவையைக் கலைத்துத் தேர்தல் நடத்த இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். இதனையடுத்து இலங்கை நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்டுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா பரவலால் இந்தத் தேர்தல் குறித்த திட்டங்கள் மாற்றப்பட்டு, தேர்தல் தள்ளிப்போடப்பட்டது. இந்நிலையில், கரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, ஐந்து மாதங்களுக்குப் பின்னர் அங்கு நேற்று பொதுத் தேர்தல் நடைபெற்றது.

Advertisment

இன்று நடைபெற்று வரும் இதன் வாக்கு எண்ணிக்கையில், பெரும்பான்மை தொகுதிகளில் மஹிந்த ராஜபக்சேவின் கட்சி முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. இதுகுறித்த மஹிந்த ராஜபக்சேவின் ட்விட்டர் பதிவில், "உங்கள் வாழ்த்து அழைப்புக்கு நன்றி. இலங்கை மக்களின் வலுவான ஆதரவுடன், நம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன். இலங்கை, இந்தியா எப்போதும் நண்பர்களே" எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, "இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் முன்னேற்றுவதற்கும், நமது சிறப்பான உறவுகளை எப்போதும் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதற்கும் நாம் ஒன்றிணைவோம்" எனத் தெரிவித்துள்ளார்.