Skip to main content

தேர்தல் நெருங்க நெருங்க விழிபிதுங்கும் மோடி!

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

எத்தனையோ திருகுதாளங்களைச் செய்தாலும் இந்திய அளவில் பாஜகவின் தோல்வியை மோடியால் மறைக்கவே முடியவில்லை. கருத்துக் கணிப்பு நிறுவனங்களே பாஜக வெற்றி என்று பொய்கூட சொல்ல முடியாமல் மேம்போக்காக மெத்துகின்றன. தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே இதுதான் நிலை என்றால், போகப்போக என்ன நடக்குமோ என்று தெரியாமல் மோடி கண்டபடி உளறத் தொடங்கிவிட்டார்.

 

modi at coimbatore

 

குஜராத்தில் ஹர்திக் படேலை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவே பயப்படுகிறார். நீதிமன்றங்கள் மூலமாக அவருக்கு கிடைத்த இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையைக் காரணமாகக் காட்டி தேர்தலில் நிற்கமுடியாமல் செய்வதில் பாஜக வெற்றிபெற்றுவிட்டது.

 

இந்நிலையில்தான் மோடியின் அராஜகப் போக்கை விமர்சனம் செய்து அத்வானி வெளியிட்ட அறிக்கை பாஜகவினர் மத்தியிலும், குஜராத் மக்கள் மத்தியிலும் எதிர்விளைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலேயே பாஜக பெரும்பான்மைக்கு திணறிய நிலையில், மக்களவைத் தேர்தலில் மேலும் சரிவைச் சந்திக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

 

ஆனால், குஜராத்தில் பாஜக 20 தொகுதிகளைப் பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிடப்படுகிறது. இத்தனைக்கும் பட்டேலுக்கு வைத்த சிலையில் விரிசல் விழுந்திருப்பதுடன், அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபடுவோருக்கு சம்பளம் கூட கொடுக்கவில்லை என்ற அதிருப்தி பெரிய அளவில் இருக்கிறது

 

எந்தப் பக்கம் போனாலும் கேட்டை போடுவதைப் போல, பாகிஸ்தான் விவகாரத்தை மட்டுமே பிடித்து தொங்கும் மோடியை, ராகுல் திருடன் என்றும், தன்னுடன் கடந்த ஐந்தாண்டு ஆட்சி தொடர்பாக விவாதிக்க பயந்து ஓடுகிறார் என்றும் ராகுல் அடிக்கிற கிண்டல் பொதுமக்கள் மத்தியில் நன்றாக எடுபடுகிறது. மோடிக்கு தன்னிச்சையாக விவாதிக்க தெரியாது என்றும், ராகுல் அளவுக்கு விவாதத் திறமையோ, கேள்விகளை எதிர்கொள்ளும் விவரமோ மோடிக்கு இல்லை என்று இளம் வாக்காளர்களே நம்பத் தொடங்கிவிட்டனர்.

 

எழுதிவைத்த, முன்பே தயாரிக்கப்பட்ட உரைகளை மட்டுமே ஏற்ற இறக்கத்தோடு மோடி மேடைகளில் பேசுகிறார் என்று மக்களுக்கே தெரிந்துவிட்டது. அதுமட்டுமின்றி, கடந்த ஐந்தாண்டுகளில் எதையெல்லாம் சாதனை என்று வாய் வித்தாரம் பேசி மோடி சமாளித்தாரோ, அதையெல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் பேசவே மறுக்கிறார். இதற்கு காரணம் எதுவுமே மக்களுக்கு பயனளிக்கவில்லை. அதுமட்டுமின்றி அவற்றால் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காததுடன், இருந்த வேலையையும் இழக்கும் நிலைதான் ஏற்பட்டிருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.

 

தென்மாநிலங்கள் 5ல் பாஜகவுக்கு 15 முதல் 20 இடங்கள் கிடைப்பதே பெரும்பாடு என்கிற உண்மையை மறைத்து மோடி வாய்ஜாலம் காட்டிக் கொண்டிருக்கிறார். எல்லா பொய் தோற்றத்தையும் உடைக்கும் வகையில், தேர்தலுக்கு பின்னர் சுயேச்சைகள், உதிரிக் கட்சிகள், எதிரிக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் தயாராக இருப்பதாக கோவை கூட்டத்தில் பேசியிருக்கிறார் மோடி.

 

அதாவது தனது கூட்டணிக்கே பெரும்பான்மை கிடைக்காது என்று மோடிக்கு உண்மை புரியத் தொடங்கியிருக்கிறது. இப்பவே இந்த நிலையென்றால், அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களில் நிலைமை மிக மோசமாகும் என்பதையே மோடியின் பதற்றம் தெளிவுபடுத்துகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.