Skip to main content

பிரதமராகப் பதவியேற்றார் மோடி!

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
Modi sworn in as Prime Minister!

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்கவுள்ளனர்.  அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சர்பானந்தா சோனோவால், ராஜீவ் ரஞ்சன் (லாலன்) சிங், ஜே.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுகான், தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், ஜோதிராதித்ய சிந்தியா, கஜேந்திர சிங் ஷெகாவத், மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், செஷல்ஸ் துணை அதிபர் அகமது அபிஃப் ஆகியோர் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்