"மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்"... திருக்குறளை சுட்டிக்காட்டி ராணுவவீரர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு...

modi speaks about thirukural in ladakh

படைமாட்சி என்ற அதிகாரத்திலுள்ள திருக்குறள் ஒன்றை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி இந்திய ராணுவவீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இந்தியா, சீனா இடையே பதட்டமான சூழல் நிலவிவரும் நிலையில், இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சீனா இப்பகுதியில் ஆயுத பலத்தை அதிகரித்து வருவதால், இந்தியாவும் பதிலடி தரும் வகையில் ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று திடீர் பயணமாக 'லடாக்' சென்ற பிரதமர் மோடி அப்பகுதியில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் எல்லைப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி 'படைமாட்சி' என்ற அதிகாரத்திலுள்ள திருக்குறள் ஒன்றை மேற்கோள்காட்டி ராணுவவீரர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கினார்.

வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர், "படை வீரருக்கான பண்புகள் பற்றி திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

'மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்,

எனநான்கே ஏமம் படைக்கு'

எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார். அதாவது, வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழியில் நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படை வீரனுக்குத் தேவையான பண்புகள் எனத் திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

LADAK modi
இதையும் படியுங்கள்
Subscribe