இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது. கரோனாவிற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைச் சமாளிக்க 'PM CARES Fund'-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்கு தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தான் சேமித்து வைத்திருந்த ரூ.25,000-ஐ கரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.