
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி உத்தரப் பிரேதச நிதியமைச்சர் சுரேஷ் குமார் கன்னா, 2025-2026 ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், சட்டமன்றத்தில் பான்மசாலா சாப்பிட்டு துப்பிய எம்.எல்.ஏவை சபாநாயகர் கண்டித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவை சபாநாயகர் சதீஷ் மஹானா நேற்று கூறியதாவது, “இன்று காலை, நமது சட்டப்பேரவையில் பான் மசாலா சாப்பிட்டு ஒரு உறுப்பினர் எச்சில் துப்பியதாக எனக்கு தகவல் கிடைத்தது. எனவே, நான் இங்கு வந்து அதை சுத்தம் செய்தேன். வீடியோவில் எம்.எல்.ஏ.வைப் பார்த்திருக்கிறேன். ஆனால், நான் யாரையும் அவமானப்படுத்த விரும்பவில்லை. எனவே, நான் அவர்களின் பெயரைச் சொல்லவில்லை.
யாராவது இதைச் செய்வதைக் கண்டால், அவர்களைத் தடுக்க வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த சபையை சுத்தமாக வைத்திருப்பது நமது பொறுப்பு. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. வந்து தாமாக முன் வந்து இதைச் செய்ததாகச் சொன்னால், அது நல்லது; இல்லையெனில், நான் சம்மன் அனுப்பி அவரை வரவழைப்பேன். 25 கோடி மக்கள் சட்டப்பேரவை மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை எம்.எல்.ஏக்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.