Minister Veena George offered condolences

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று முன்தினம் (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.

மூன்றாவது நாளாக இன்றும் (01.08.2024) மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 282 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே நிலச்சரிவு பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காகக் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வயநாட்டுக்கு நேற்று (31.07.2024) காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற வாகனம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய அமைச்சர் வீணா ஜார்ஜ்க்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.

இதனையடுத்து அவர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக வயநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அணைத்துக் கட்சிக் கூட்டமும், அரசு அதிகாரிகளுடன் உயர்மட்டக் கூட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.