Skip to main content

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு; கேள்விகளை அடுக்கிய உச்சநீதிமன்றம்

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

Minister Senthil Balaji case The Supreme Court framed the questions

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

 

முன்னதாக, செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா அறிவித்திருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளிக்கையில், “செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான். அவர் குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல என்று இரண்டு நீதிபதி அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் விசாரிக்கும். எனவே செந்தில் பாலாஜி வழக்கின் இறுதித் தீர்ப்பை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கும்” எனத் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா  மேல்முறையீடு செய்திருந்தார்.

 

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என நீதிபதி நிஷா பானு தெரிவித்தார். மேலும் நீதிபதிகள் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கையில் எடுத்த பின் நாங்கள் ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து அம்சங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்போது இந்த வழக்கை முடித்து வைக்கலாமே எனக் கேள்வி எழுப்பினர். அதன் பின்னர் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

 

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு செய்த வழக்கு நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மதியம் 2 மணிக்கு விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிடுகையில், “அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது. அப்படி இருக்கையில் அமலாக்கத்துறையினர் எப்படி கைது செய்ய முடியும். ஒருவரிடம் விசாரணை செய்து அதன் மூலம் வாக்குமூலத்தைப் பெற்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகப் பயன்படுத்த முடியும். அமலாக்கத்துறையால் நேரடியாகக் கைது செய்து விசாரணை நடத்த முடியுமா. சுங்கத்துறை அதிகாரிகளால் ஒருவரைக் கைது செய்ய முடியுமா. காவல்துறையினர் தான் கைது செய்ய முடியும். இது அமலாக்கத்துறையினருக்கும் பொருந்தும். காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. சட்ட விதிகளின்படி தான் கைது செய்யப்பட்டுள்ளோமா என்பதைக் கருத்தில் கொள்ளவும், அதனை உறுதிப்படுத்தவும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உரிமை உண்டு” என வாதிட்டு வருகிறார்.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “எவ்வளவு நேரம் வாதிடுவீர்கள்” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கபில் சிபல், “நாள் முழுவதும் தேவை” எனப் பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து அவர் வாதத்தை முன் வைக்கையில், “ஆவணங்களைக் கையகப்படுத்துவது, அதனை முடக்குவது தான் அமலாக்கத்துறைக்கு உள்ள அதிகாரம்” எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி போபண்ணா, “அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் உள்ளது” எனத் தெரிவித்தார். அதற்கு கபில் சிபல், “அமலாக்கத்துறையினர் நீதிமன்ற விசாரணைக்குத் தான் அனுப்ப முடியும் எனும்போது எவ்வாறு விசாரணை நடத்த முடியும்” எனத் தெரிவித்தார். அதற்கு, “அமலாக்கத்துறை நேரடியாகக் கைது செய்ய முடியாதா” என செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். இவ்வாறு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்