Skip to main content

இறந்த பின்னும் தொழிலாளர்களுக்கு நேர்ந்த அவலம்...

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

migrant workers bodies sent via lorry in uttarpradesh

 

உத்தரப்பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் திறந்த லாரிகளில் போட்டு ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 


கடந்த வாரம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து லாரி மூலமாக உத்தரப்பிரதேசம் வழியாகத் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். அப்போது உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஒரியா மாவட்டம், மிஹாலி அருகே தொழிலாளர்களின் லாரி பயணித்துக் கொண்டிருந்த போது, எதிரே வந்த மற்றொரு லாரியுடன் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் லாரியில் பயணித்த தொழிலாளர்களில் 26 பேர் பலியானார்கள்.

இந்நிலையில் இந்த விபத்தில் பலியான ஜார்க்கண்டைச் சேர்ந்த 11 பேரின் உடல்களை உத்தரப்பிரதேச அரசு அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பி வைத்தது. ஆனால் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மரியாதையை அளிக்காமல் பலியானவர்களின் உடல்களைத் திறந்த லாரியில் கருப்பு தார்பாய் மூலம் மூடி அனுப்பி வைத்துள்ளதாக ஜார்க்கண்ட் அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இறந்தவர்களின் உடல்களோடு காயமடைந்த தொழிலாளர்களும் அதே லாரியில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

 


இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், "மனிதத்தன்மையில்லாத இந்தச் செயலை உத்தரப்பிரதேச அரசு தவிர்த்திருக்க வேண்டும். உடல்களை மாநில எல்லை வரை உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளேன்" எனத் தெரிவித்தார். இதனை அடுத்து லாரியில் இருந்து உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஜார்க்கண்ட்டில் உள்ள அவர்களது வீடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

லிப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened on The girl who asked for a lift

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி. இந்த நிலையில், அவர் வசித்து வந்த பகுதிக்கு அடுத்த பகுதியான காசியாபாத் பகுதியில் சில நாட்களுக்கு முன் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

அந்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்த சிறுமி அங்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சிறுமி, வீடு திரும்பியபோது, அந்த வழியாக வந்த காரை மறித்து லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து, காரில் இருந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு லிப்ட் கொடுத்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் கழித்து, அந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அந்த சிறுமியை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சிங், அனில் மற்றும் சோனு ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கேட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.