Skip to main content

மேகதாது அணை பிரச்சனை! புதுச்சேரி அமைச்சரை சந்தித்த ரவிக்குமார் எம்.பி! 

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

mekedatu dam problem! Ravikumar MP meets Puducherry Minister

 

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்துமாறு கடந்த வாரம் டெல்லி சென்ற தமிழக நீர் வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன், ஒன்றிய அரசின் நீர்சக்தி துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என ஷெகாவத்தும் உறுதியளித்திருக்கிறார். இருப்பினும் தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்த முதல்வர் ஸ்டாலின், 3 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார்.

 

இந்த நிலையில், தமிழ்நாடு அரசைப் போல புதுச்சேரி அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து வலியுறுத்தியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  பொதுச்செயலாளரும்  விழுப்புரம் எம்.பி.யுமான ரவிக்குமார்.

 

அந்த சந்திப்பின்போது, காவிரி பிரச்சனைகள் பற்றி விரிவாக எழுதப்பட்ட கடிதத்தையும் அமைச்சரிடம் தந்துள்ளார் ரவிக்குமார். அந்தக் கடிதத்தில், "புதுச்சேரி மாநிலத்தின் பிரத்தியேகமான புவியியல் சூழல், தண்ணீரைச் சேமித்து வைக்கும் நீர்த்தேக்கம் எதையும் கட்டுவதற்கு உகந்ததாக இல்லை. இங்குள்ள நிலம் களிமண் நிலமாக இருப்பதால் நெல்லைத்தவிர வேறு பயிர் எதையும் சாகுபடி செய்ய முடியாது. புதுச்சேரியில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பான 27 ஆயிரம் ஏக்கர் என்பது நீண்டகாலமாக நிலையானதாக மாறாமல் உள்ளது. இங்குள்ள விவசாயம் பெரிதும் வடகிழக்குப் பருவ மழையைத்தான் நம்பியுள்ளது. அதுமட்டுமின்றி கடலோரப் பகுதி முழுவதும் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. எனவே புதுச்சேரி மாநில விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ளனர்.

 

காவிரிப் பிரச்சனை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் நம்பியார், புதுச்சேரிக்கு 9 டி.எம்.சி. தண்ணீர் வேண்டும் என வாதாடினார். ஆனால் நடுவர் மன்றத்தால் ஒதுக்கப்பட்ட 7 டி.எம்.சி. தண்ணீரைத்தான் உச்சநீதிமன்றமும் ஒதுக்கியது. நடுவர் மன்றம் புதுச்சேரியில் குறுவை மற்றும் சம்பா இணைந்த முதல்போக சாகுபடி 27,145 ஏக்கரில் நடப்பதாகவும், தாளடி என்னும் இரண்டாம் போக சாகுபடி 15,388 ஏக்கரில் நடப்பதாகவும் உறுதிசெய்தது.

 

புதுச்சேரியின் பிரத்தியேகமான புவியியல் நிலையைக் கருத்தில்கொண்டு அங்குள்ள விவசாயிகள் இரண்டு போகம் சாகுபடி செய்வதற்கான உரிமையை உச்சநீதிமன்றமும் தனது இறுதித் தீர்ப்பில் அங்கீகரித்துள்ளது. அதற்காக  ஒதுக்கப்பட்ட 7 டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டின் வழியாக நந்தலாறு, நட்டாறு, வஞ்சி ஆறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, பிரவிடையான் ஆறு ஆகிய 7 ஆறுகளின் மூலம் புதுச்சேரி பெற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

தற்போது காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்காது. அதனால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும். மேகதாது அணையைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதோடு அரசியல் ரீதியில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர 12.07.2021 அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியுள்ளது. அதில் 3 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

புதுச்சேரி அரசும் உடனடியாக இந்தப் பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் காரைக்கால் பகுதியில் நடைபெற்றுவரும் விவசாயம் முற்றாக அழியும் நிலை ஏற்படும். எனவே சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் காவிரிநீர் உரிமையை நிலைநாட்ட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதற்கென அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாடு அரசுடன் இணைந்து புதுச்சேரியின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்டத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்" என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் ரவிக்குமார்.

 

அவரிடமிருந்து கடிதத்தைப்  பெற்றுக்கொண்ட அமைச்சர் லஷ்மிநாராயணன், முதல்வரிடம் இது குறித்து கலந்தாலோசிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமல்” - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
D.K.Sivakumar said Meghadatu plan will be implemented when the Congress government is established in central

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

இதற்கிடையே, விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்கான ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்படவுள்ளன. தேவையான அனுமதிகளை கொடுத்தால் விரைவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். பெங்களூர் நகரில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை விரைவில் கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலையொட்டி, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது, மேகதாது திட்டத்திற்காக போராட்டம் நடத்தினோம். அதற்கு பணிந்து அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க ரூ.1,000 கோடி ஒதுக்கியது. பெங்களூரில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. மேகதாது திட்டத்தை அமல்படுத்தினால்தான் பெங்களூருக்கு குடிநீர் வழங்க முடியும். அதனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பயன் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றமும் ஆதரவாக கருத்து கூறியுள்ளது” என்று கூறினார்.

Next Story

“கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை” - அமைச்சர் துரைமுருகன்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Minister Duraimurugan says We are not concerned about Karnataka talking about mekadatu dam

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

இந்த நிலையில், விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று (16-02-24) கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். 

இதையடுத்து பேசிய முதல்வர் சித்தராமையா, “தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்கான ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்படவுள்ளன. தேவையான அனுமதிகளை கொடுத்தால் விரைவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். பெங்களூர் நகரில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை கட்டும்போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு மற்றும் வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது” என்று கூறினார். மேகதாது அணை விரைவில் கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (17-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், சித்தராமையா கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி கர்நாடகா அரசால் மேகதாது அணையை கட்ட முடியாது. கர்நாடகா நிதியை ஒதுக்கலாம், குழுவை அமைக்கலாம். ஆனால், தமிழ்நாடு அனுமதியின்றி அணை கட்ட முடியாது. மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதனால், எந்தக் காலத்திலும் மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது. அதுதான் சட்டம் அதுதான் நியதி” என்று கூறினார்.