Skip to main content

"காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது" - புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

"Megha Dadu Dam should not be discussed at Cauvery Management Commission meeting" - Puducherry Assembly resolution!

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15-வது சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் கடந்த 26-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தில் 13-ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணைக் கட்டுமான விவாதத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என முதலமைச்சர் ரங்கசாமி தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் பேசுகையில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் கர்நாடகாவில் சுமார் 67 டி.எம்.சி காவிரி தண்ணீரைச் சேமிக்க முடியும். இதனால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் டெல்டா பகுதிக்கு வழங்கப்பட வேண்டிய 7 டி.எம்.சி காவிரி நீர் முழுமையாகக் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. இதனால் காவிரியின் கடைமடை நீர்ப் பாசனப் பகுதிகளான தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரவேண்டிய நீரில் பற்றாக்குறை ஏற்பட்டு காரைக்கால் டெல்டா பகுதியில் விவசாயம் பாதிப்புக்குள்ளாகி நெல் உற்பத்தி மற்றும் பொருளாதாரம் முற்றிலும் பாதிக்கும்.

 

மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் புதுச்சேரி அரசு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரியில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசுக்குக் கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டு, அன்றைய தினமே பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

தமிழக அரசு மூலம் உச்ச நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ள போது அது நீதிமன்ற வரம்பிற்கு உட்பட்டதாகும். எனவே இன்று (31-ஆம் தேதி) நடைபெற உள்ள 13-ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகதாது அணைக் கட்டுமான விவாதம் எடுத்துக் கொள்ளக்கூடாது என ஒருமனதாகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுகிறேன்" என்றார். 

 

முதலமைச்சர் ரங்கசாமி கொண்டு வந்த இந்த தீர்மானத்தின் மீது பேசிய தி.மு.க எம்.எல்.ஏ நாஜிம், "மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் புதுச்சேரி அரசும் ஒரு மனுதாரராகச் சேர வேண்டும்" என்றார். அதற்கு  அமைச்சர் லட்சுமி நாராயணன் பதிலளித்துப் பேசுகையில், "தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில் நாமும் ஒரு மனுதாரராகத் தாமாகவே சேர்க்கப்பட்டுள்ளதால் வழக்கு தொடர வேண்டியதில்லை" எனப் பதிலளித்தார். 

 

சுயேச்சை எம்.எல்.ஏ பி.ஆர்.சிவா பேசும்போது, "சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதையும் தாண்டி இங்குள்ள பா.ஜ.க எம்.எல்.ஏக்களும் டெல்லி சென்று, இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழ்நாடு புதுச்சேரி மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தெளிவான முடிவு எடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்" என்றார். அதற்கு அமைச்சர் நமச்சிவாயம், “மேகதாது அணை கட்ட கூடாது என்பதில் புதுச்சேரி பா.ஜ.க தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறது. முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கிறது" என்றார். இறுதியாக சபாநாயகர் செல்வம் இந்த தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்புக்கு விடுத்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில்...” - கமல்ஹாசன் கண்டனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
kamal about pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களின் மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ரஜினி பாட்டு பாடிய ஜப்பானிய ரசிகர் - வீடியோ வைரல்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
japanese sing rajinikanth muthu movie song

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ மாணவர்களுக்கான பன்னாட்டு வணிகத்துறை சார்பில் தொழிற்சாலை - கல்வி நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மொத்தம் மூன்று நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் கலந்து கொண்டார். 

அப்போது நடந்த கருத்தரங்கில் தமிழ் மொழி குறித்து பேசிய அவர், தமிழ் தனக்கு நன்றாகவே தெரியும் என்றும், தமிழ் சினிமா பாடலும் பாடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இறுதியாக ரஜினியின் முத்து படத்தில் இடம்பெற்ற ‘ஒருவன் ஒருவன் முதலாளி...’ பாடலை முழுவதுமாக பாடி அசத்தினார். அதை அங்கிருந்த மாணவர்கள் உள்பட அனைவருகளும் கைதட்டி ரசித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. கவிதாலயா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஸ்டைல், காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். கிட்டத்தட்ட 170 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் ஜப்பானில் மட்டும் 180க்கும் மேற்பட்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. அங்கு வசூலிலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.