Skip to main content

"புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்"-சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

Published on 15/08/2022 | Edited on 15/08/2022

 

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலை, காந்தி சிலை முன்பு வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியேற்றி வைத்து காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

 

தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதனையடுத்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 

விழாவில் சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, " புதுச்சேரி, வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ 7.10 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும். காமராஜர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்பிற்கு கல்வி உதவித்தொகையாக ரூ 19.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் எளிதாக வந்து செல்ல வசதியாக விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழகத்திலிருந்து 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ரூ.425 கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்படும்" என தெரிவித்தார்.

 

தொடர் விடுமுறை காரணமாக புதுச்சேரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் இந்த வண்ணமயமான சுதந்திர தின விழாவை கண்டுகளித்தனர். இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.