Manu Bhaker speaks out against boycotting Khel Ratna award

மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘கேல் ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான விளையாட்டுத் துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘கேல் ரத்னா’ விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் சமீபத்தில் வெளியானது. ஆனால், அந்த பட்டியலில் பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கரின் பெயர் இடம்பெறவில்லை. இது, தற்போது இந்திய அளவில் பேசுப் பொருளாக மாறியுள்ளது.

Advertisment

கடந்த 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு பதக்கங்களை வென்ற பெரும்பாலான வீரர்கள், வீராங்கனைகளுக்கு ‘கேல் ரத்னா’ விருது வழங்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு பதக்கம் வென்ற மனு பாக்கரின் பெயர் விருது பட்டியலில் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இதனிடையே, ‘கேல் ரத்னா’ விருதுக்கு மனு பாக்கர் விண்ணப்பிக்கவில்லை என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில், மனு பாக்கரின் தந்தை, ‘தாங்கள் முறையாக விண்ணப்பித்தும் பதிலளிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனு பாக்கர், “விருதுகளும், அங்கீகாரமும் எனக்கு ஊக்கமளித்தாலும், அவை எனது நோக்கம் அல்ல; ஒரு வீராங்கனையாக நாட்டுக்காக விளையாடுவது மட்டுமே எனது இலக்கு. விருதுக்கு விண்ணப்பிக்கும் போது பிழை இருந்திருக்கக் கூடும். விருதுகள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து நாட்டுக்காக பதக்கங்களை வெல்வேன்” எனக் கூறியுள்ளார்.