Skip to main content

மணிப்பூர் வீடியோ விவகாரம்; நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

Manipur Video Affair Parliament adjourned for the day

 

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. மழைக்காலக் கூட்டத்தொடரில் மணிப்பூரில் வன்முறை, பொது சிவில் சட்டம், ஆளுநர்கள் செயல்பாடுகள், அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள், விலைவாசி உயர்வு, டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்டம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி உள்ளன. எனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதே சமயம் மழைக்காலக் கூட்டத்தொடரில் டெல்லி அதிகாரம் தொடர்பான அவசரச் சட்டம், டிஜிட்டல் தனிநபர் தகவல் மசோதா, வனப் பாதுகாப்புத் திருத்த மசோதா உள்ளிட்ட 31 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏற்கனவே நிலுவையில் உள்ள 7 மசோதாக்கள் விவாதத்திற்கு கொண்டு வர உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் இன்று காலை இரு அவைகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க அனுமதி கேட்கப்பட்டது. இரு அவைகளிலும் உடனடியாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் மறைந்த மக்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் மறைந்த ஹர்த்வார் துபேக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து மீண்டும் இரு அவைகளும் கூடிய நிலையில் மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவம் குறித்து உடனே இரு அவைகளிலும் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மீண்டும் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதையடுத்து நாளை காலை 11 மணி வரைக்கும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டன. அதே போன்று தொடர் அமளி காரணமாக நாளை காலை வரை மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்