மணிப்பூர் கொடூரம்; கேள்விகளை அடுக்கிய உச்ச நீதிமன்றம்

Manipur issue The Supreme Court framed the questions

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பழங்குடியின மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், அது கலவரமாக மாறியது.

இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணி சார்பில் எதிர்க்கட்சியினர், கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து 8 வது நாளான இன்று வரை இரு அவைகளிலும் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவுவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து மணிப்பூர் கலவரத்தின் போது ஆடைகள் இன்றி இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 2 பெண்கள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். தங்களது மனுவில், இந்தக் கொடூர சம்பவம் குறித்துப் பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களைப் பற்றிய விவரங்கள் வெளியே தெரியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் வலியுறுத்தியிருந்தனர். எங்களை அழைத்து சென்று அந்த கும்பலிடம் ஒப்படைத்ததே காவல் துறையினர்தான் எனப் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மணிப்பூர் விவகாரத்தில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யத்தாமதம் ஏன். இந்த சம்பவம் நடைபெற்ற அருகில் இருக்கும் எந்த ஒரு காவல் நிலையத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெறுகிறது என்பதைப் பற்றிய தகவல்கள் கூட காவல் துறையினருக்குத்தெரியவில்லையா. இல்லை தெரிந்தும் இவ்வளவு நாட்கள் நடவடிக்கை எடுக்கவில்லையா என மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மணிப்பூர் மாநில காவல்துறையினர் மேல் நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்தனர். மத்திய அரசு சார்பில் இந்த வழக்கை அசாம் மாநில நீதிமன்றத்திற்கு மாற்றிவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு 3 மாதம் அவகாசம் கோரியுள்ளது. மணிப்பூர் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தனது அதிருப்தியைத்தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

manipur
இதையும் படியுங்கள்
Subscribe