Manipur declaration as a state full of tension

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரங் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

Advertisment

இதற்கிடையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் வன்முறை குறைகிறது என்று மாநில அரசு அவ்வப்போது கூறி வந்தாலும் அங்கு சில பகுதிகளில் வன்முறை நடந்த வண்ணம் தான் இருந்தது.

Advertisment

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தைப் பதற்றம் நிறைந்த பகுதியாக அறிவித்து அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கே உத்தரவிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் மாநில அரசின் நிர்வாகத்திற்கு உதவியாக ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடும் தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாத குழுக்களுக்கு எதிராக ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது எனத்தெரிவித்துள்ளார். அதே சமயம் மணிப்பூர் மாநிலத்தில் இம்பால், லாம்பல்ம் சிங்ஜமேய் உள்ளிட்ட 19 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளைத்தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு இந்தஅறிவிப்பு அமலில் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகக் கடந்த ஜூலை மாதம் காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. இது தொடர்பாகத்துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றவாளிகளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் மணிப்பூர் மாநில அரசு உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.