manipur cm biren singh says goverment gives readymade home for peoples

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களை பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

கடந்த மே மாதம் 3 ஆம் தேதி இதற்காக பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 98 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாகக் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி மணிப்பூருக்குச் சென்று பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இருப்பினும் அங்கு தொடர்ந்து கலவரம் மற்றும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Advertisment

கலவரத்தின் போது ஏராளமான மக்கள் தங்களது வீடுகளை இழந்தனர். மேலும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு மௌனம் காப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

இந்நிலையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் நேற்று சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநிலத்தில் நிகழும் கலவரத்தால் மக்கள் பெரும் அவதியடைகின்றனர். தற்போது நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களை தங்கள் சொந்த இடங்களில் தங்க வைப்பதற்கு அரசு ஏற்பாடுகளை செய்யும். அதுவரை அவர்களுக்கு ரெடிமேட் வீடுகளை வழங்க உள்ளது.இதற்காக சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வீடுகள் வரை கட்டப்படும். இதற்கு தேவையான பொருட்கள் வாங்க ஆர்டர்கள்கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள்2 வாரங்களுக்குள் இம்பால் வந்து சேரும். இந்த வீடுகளை அமைப்பதற்கான இடத்தை அரசு பரிசீலித்து வருகிறது”எனத்தெரிவித்தார்.

மேலும், இம்பால் மேற்கு மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தது குறித்து முதல்வர் பிரேன் சிங் பேசுகையில், “வன்முறையை நிறுத்துங்கள். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மக்களையும் கேட்டுக்கொள்கிறேன் ஆயுதங்களுடன் இருக்கும் மெய்தி இனத்தினரையும் கேட்டுக்கொள்கிறேன். தாக்குதல்களை விட்டுவிட்டு அமைதியின் பாதைக்கு திரும்புங்கள். அப்போதுதான் மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வர முடியும்” எனத்தெரிவித்தார்.