man misbehaved with a woman who was walking  for morning in Bengaluru

ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். அதிகாலையில் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் இவர், வழக்கம்போல் கடந்த வெள்ளிக்கிழமை(2.8.2024) அன்று அதிகாலை கோணங்குண்டே பகுதியில் நடைப்பயிற்சி செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். மேலும் தன்னுடன் நடைப்பயிற்சி செய்யும் தோழி வருகைக்காகவும் காத்திருந்திருக்கிறார்.

இந்த நிலையில் தனியாக நின்றுகொண்டிருந்த அந்த பெண்ணை பின்பக்கத்தில் இருந்து திடீரென வந்த மர்ம நபர் ஒருவர், கட்டிப்பிடித்து அநாகரிகமாக நடக்க முயன்றார். அவரிடம் இருந்து தப்பித்து ஓடிய அந்த பெண்ணை அந்த இளைஞர், விடாமல் துரத்தில் வந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அப்போது அந்த பெண் கத்தி கூச்சலிட்டதால், பயந்துபோன இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இது அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

இதனிடையே நடந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்று வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமராக காட்சிகளைக் கைப்பற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.