இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் ரேஷன் பொருட்கள் ஊழல் தொடர்பாக ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளை ஷேக் ஷாஜகான் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் தப்பிய ஷேக் ஷாஜகான் தலைமறைவாக இருந்தார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள், ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீசில் புகார் அளித்தும் அதற்கு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஷேக் ஷாஜகானின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப் பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடந்து வந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வந்ததது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. பெண்களின் இந்த போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, 55 நாட்களாகத் தலைமறைவாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷேக் ஷாஜகானை மேற்கு வங்க போலீசார் கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷேக் ஷாஜகானை, 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கீழமை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்க உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மாநில போலீஸ் முற்றிலும் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. இந்த வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
அதன்படி, சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று கொல்கத்தாவில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்துக்குச் சென்றனர். ஆனால் மாநில போலீசார், ஷாஜகானை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது.