
வங்காளத்தில் பிறந்து இந்திய தேசியக் கீதத்தை எழுதியவர் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். அழகிய கீதாஞ்சலி கவிதை தொகுப்புக்காக கடந்த 1912இல் உயரிய விருதான நோபல் பரிசை இவர் பெற்றார். ஐரோப்பியர் அல்லாத நோபல் பரிசு பெற்றவர்களில் முதன்மையானவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவரின் கவிதைகளுக்காகவும், எழுத்துக்களுக்காகவும்‘கிநைட்ஹூட்’ என்று சொல்லப்படும் கவுரவ விருதை கடந்த 1915ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இவருக்கு கொடுத்து கெளரவித்தனர். ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை எதிர்த்து ரவீந்திரநாத் தாகூர் தனக்கு தரப்பட்ட கவுரவ விருதான ‘கிநைட்ஹூட்’ விருதை பிரிட்டிஷ் அரசாங்கத்திடமே திருப்பி அனுப்பினார். பல ஓவியங்களும், டூடுல்களும், பல கட்டுரைகளும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களும் இயக்கியிருக்கிறார். இவரை இன்று வரைக்கும் பலரும் போற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் மருமகன் அபனீந்திரநாத் தாகூரின் வீடு, குடிமை அமைப்பின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாகக் கூறி மேற்கு வங்க அரசு இடித்து தரமட்டமாக்கியுள்ளது. 20ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஓவியரான அபனீந்திரநாத் தாகூரின் வீடு சாந்திநிகேதனில் உள்ளது. அந்த வீட்டை அவரது மகன் அலோகேந்திரநாத் தாகூர் கட்டி சில ஆண்டுகள் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, அந்த வீடு குடும்பத்தினரால் விற்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த வீடு அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், குடிமை அமைப்பின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாகக் கூறி அபனீந்திரநாத் தாகூரின் வீட்டை உள்ளூர் நிர்வாகம் இடிக்க முடிவு செய்தது. இது குறித்து தகவல் அறிந்த போல்பூர் நகராட்சி, வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தை இடிக்க வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், நகராட்சியின் உத்தரவை கண்டுகொள்ளாமல் நேற்று வீடு இடிக்கப்பட்டது. இந்த செயலுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை பா.ஜ.க கடுமையாக விமர்சித்துள்ளது. மம்தா பானர்ஜி அரசாங்கம் வரலாற்றையும் மாநிலத்தின் கலாச்சார மரபையும் அவமதிக்கிறது என்று குற்றம் சாட்டியது.