Skip to main content

“ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஆர்வம் இருப்பவர்கள் மனம் மாறமாட்டார்கள்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
 Mallikarjuna Kharge says Those who are interested in saving democracy will not change their minds

இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர். 

இதற்கிடையே, நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தது. அதில், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கடந்த 24ஆம் தேதி அறிவித்தது. அதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்திருந்தார். மேலும், நிதிஷ்குமார் இன்றோ அல்லது நாளையோ ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, பின்பு அடுத்த நாளே பாஜக கூட்டணியுடன் இணைந்து முதல்வராக மீண்டும் பதவி ஏற்பார் என்று தற்போது தகவல் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (27-01-24) கர்நாடகா மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் இணையவிருப்பதாக வரும் தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இந்தியா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியேறுவது குறித்து என்னிடம் எந்த தகவலும் இல்லை. அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. நான் நாளை (28-01-24) டேராடூன் செல்கிறேன். அதன் பிறகு டெல்லி செல்ல உள்ளேன். 

அங்கு சென்று முழுத் தகவல்களையும் பெற்ற பிறகு இது குறித்து உங்களிடம் விவரித்து சொல்கிறேன். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. லாலு பிரசாத் யாதவ், சீதாராம் யெச்சூரி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரிடம் பேசியிருக்கிறேன். நாம் ஒற்றுமையாக இருந்தால் பா.ஜ.கவிற்கு எதிராக சண்டையிட்டு நிச்சயம் வெற்றி பெறலாம். ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதில் ஆர்வம் உள்ளவர்கள் மனம் மாறமாட்டார்கள். எங்களுடன் இருப்பார்கள்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்