ADVERTISEMENT

பிறந்தநாளுக்கு துபாய் கூட்டிச் செல்லாத கணவர்! - அடித்துக் கொன்ற மனைவி! 

12:34 PM Nov 25, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மஹாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியைச் சேர்ந்தவர் நிகில் கண்ணா (36). கட்டட பொறியாளரான இவர், ரேணுகா ஜாகர் கண்ணா(38) என்பவரைக் காதலித்து கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும், புனே வான்வாடி எனும் பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்பொழுது தகராறு ஏற்படுவது வழக்கம். அப்பொழுதெல்லாம், நிகில் கண்ணாவின் தந்தையும் மருத்துவருமான புஷ்பராஜ் கண்ணா வந்து சமாதானம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (24ம் தேதி) ரேணுகா, நிகிலின் தந்தை புஷ்பராஜ்க்கு போன் செய்து அவருக்கும் தன் கணவருக்கும் இடையே சண்டை எனவும் அதன் காரணமாக வீட்டிற்கு வாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புஷ்பராஜ், உடனடியாக கிளம்பி தன் மகன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் காரை நிறுத்தியபோது, மீண்டும் போன் செய்த ரேணுகா, ‘அவசரம், சீக்கிரம் வாங்கள்’ எனச் சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளார். இதனால், பதறிப் போன புஷ்பராஜ், விறுவிறுவென அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள தனது மகன் வீட்டிற்கு ஓடியுள்ளார். அங்கு சென்று தன் மகன் வீட்டிற்குள் நுழைந்தபோது, அவரது மகன் நிகில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து வீழ்ந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு பதறிப்போன புஷ்பராஜ், உடனடியாக மகனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், நிகில் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தத் தகவல் வான்வாடி போலீஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு விரைந்த போலீஸார் நிகில் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும், நிகிலின் தந்தை புஷ்பராஜ், தனது மகனை அவரது மனைவிதான் கொலை செய்திருக்க வேண்டும் எனப் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், 2017ம் ஆண்டு என் மகனும் ரேணுகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்குத் திருமணம் நடந்த சில மாதங்களில் இருந்தே இருவருக்கும் இடையே சண்டை வரும். அப்பொழுதெல்லாம் நான் வந்து அவர்களை சமாதானம் செய்து வைத்துவிட்டுச் செல்வேன்.

கடந்த செப்.18ம் தேதி ரேணுகாவின் பிறந்தநாள் வந்தது. அதற்கு அவர் என் மகனை துபாய்க்கு அழைத்து செல்ல வற்புறுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் துபாய்க்கு செல்ல முடியாமல் போயுள்ளது. இதனால் என் மகன் நிகில் மீது ரேணுகாவுக்கு கோவம். அதுமட்டுமல்லாமல், நவ.5ம் தேதி அவர்களது திருமண நாள் அன்றும் நிகில், ரேணுகாவுக்கு பரிசு பொருட்களை வழங்கவில்லை எனும் கோவம் இருந்தது. இதனால் அவர்களுக்குள் சமீபகாலமாக அடிக்கடி சண்டை வந்தது. ரேணுகாவின் உறவினர்கள் வீட்டு விஷேசத்திற்கு அவரை டெல்லி அழைத்து செல்லாததும் அவருக்கு நிகில் மீது கோவம் இருந்தது. இதன் காரணமாகவே, நிகிலை ரேணுகா தாக்கியுள்ளார். அதில் என் மகன் இறந்துள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரைக் கொண்டு போலீஸார் ரேணுகா மீது ஐ.பி.சி. 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், போலீஸார் தரப்பில் இருந்து தெரிவிக்கும்போது, நிகிலுக்கும் ரேணுகாவுக்கும் இடையே நேற்று (24ம் தேதி) இரவு வாய் தகராறு நடந்ததுள்ளது. அதில், ஆத்திரம் அடைந்த ரேணுகா நிகில் மூக்கின் மீது குத்தியுள்ளார். இதில் அவரது மூக்கும் சில பற்களும் உடைந்துள்ளது. மூக்கு உடைந்ததால், அவரது சுவாசம் நின்று மரணித்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மூக்கும், பற்களும் உடையும் அளவிற்கு ரேணுகா கையால்தான் தாக்கினாரா அல்லது வேறு ஏதேனும் பொருள் கொண்டு தாக்கினாரா என்பது தெரியவில்லை. தற்போது ரேணுகா சிறையில் உள்ளார். அவரிடம் முழு விசாரணை முடிந்த பிறகும், நிகிலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுமே கொலைக்கான காரணமும், ரேணுகா நிகிலை கையால்தான் அடித்தாரா அல்லது வேறு ஏதேனும் பொருளைக் கொண்டு தாக்கினாரா என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT