maharashtra BJP minister nitesh rane comment causes upset mahayuti alliance

மகாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாரும் துணை முதல்வர்களாகவும் பதவி வகித்து வருகின்றனர். மகாயுதி கூட்டணிக்குள் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டாலும், கூட்டணியை கைவிடாமல் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி நடத்தி வருகிறார்.

இம்மாநிலத்தில் கூடிய விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மகாயுதி கூட்டணிக்குள் வேறுபாடுகள் இருக்கும் சூழ்நிலையில், மீன்வளம் மற்றும் துறைமுக அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான நிதேஷ் ரானே கூறிய கருத்து ஒன்று அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7ஆம் தேதி தாராஷிவ் நகரில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நிதேஷ் ரானே, “மாநிலத்தில் பா.ஜ.க அரசு உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பா.ஜ.க முதல்வர் அனைவருக்கும் தந்தையாக அமர்ந்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Advertisment

maharashtra BJP minister nitesh rane comment causes upset mahayuti alliance

மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தில் பா.ஜ.க அரசு நடக்கிறது என்றும் பா.ஜ.க முதல்வர் தந்தையாக இருக்கிறார் என்றும் பா.ஜ.க அமைச்சர் பேசியிருப்பது கூட்டணி கட்சிகளிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து, நேற்று (10-06-25) நடந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த சில அமைச்சர்கள், நிதேஷ் ரானே கூறிய கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து, இது போன்ற கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நிதேஷ் ரானேவுக்கு அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து, நேற்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “யாருடைய தந்தையையும் அப்படி கூறுவது தவறு. இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் நான் விவாதித்துள்ளேன். எந்த தலைவரும் இப்படி பேசுவது பொருத்தமானதல்ல. நான் கூறியதை நிதேஷ் ரானே ஏற்றுக்கொண்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.