Skip to main content

அதிகரிக்கும் கரோனா - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் மாநிலங்கள்!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

covid

 

இந்தியாவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கரோனா பரவல் அதிகரிப்பால், நாட்டின் சில மாநிலங்கள், பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்தன. இந்தியாவில் வளர்ந்து வரும் கரோனாவின் இரண்டாவது அலையை உடனடியாக நிறுத்தியாக வேண்டும் என பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது அறிவுறுத்தினார்.

 

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று கரோனா, புதிய உச்சத்தைத் தொட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் 25 ஆயிரத்து 833 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் இதுவரை ஒரே நாளில் இத்தனை பேருக்கு கரோனா உறுதியானது கிடையாது. இதனையடுத்து மஹாராஷ்ட்ரா அரசு, மக்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் 50 சதவீதப் பணியாளர்களோடு மட்டுமே இயங்க வேண்டும், திரையரங்குகளில் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மஹாராஷ்ட்ரா அரசு விதித்துள்ளது. மேலும், அரசு நிறுவனங்கள், பணியாளர்களின் வருகை குறித்து முடிவெடுக்க அனுமதியளித்தும், உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கவும் மஹாராஷ்ட்ரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

நேற்று மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக பஞ்சாபில், ஒரே நாளில் அதிக பேருக்கு கரோனா உறுதியானது. இதனையடுத்து, அம்மாநிலமும் கரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் வருகின்ற 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில், இரவு நேர ஊரடங்கு நாளை முதல் 'இரவு நேர' ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. மேலும் இம்மாவட்டங்களில் திருமணம், இறப்பு மற்றும் அதுதொடர்பான சடங்குகளை தவிர மற்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் ஞாயிறு முதல் தடை விதிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. மேலும், திருமணம், இறப்பு மற்றும் அதுதொடர்பான நிகழ்வுகளில் இருபது பேருக்கு மேல் கலந்துகொள்ளக்கூடாது என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

 

மேலும், ஞாயிற்றுக் கிழமைகளில் திரையரங்குகள், உணவகங்கள், மால்கள் அனைத்தையும் மூடவும் பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்