Skip to main content

கரோனா தடுப்பூசி! - உரசிக்கொள்ளும் மத்திய, மாநில அரசுகள்!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

union health minister

 

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசுக்கும் மஹாராஷ்ட்ரா, சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகளுக்கும் இடையே உரசல் உண்டாகியுள்ளது. நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மஹாராஷ்ட்ரா, சத்தீஸ்கர் மாநில அரசுகளை விமர்சித்தார்.

 

பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "தடுப்பூசிகளின் பற்றாக்குறை குறித்து மகாராஷ்டிராவில் மக்கள் பிரதிநிதிகள் கூறியிருப்பதைப் பார்த்தேன். அது தொற்று நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதில், மஹாராஷ்டிரா அரசின் தொடர் தோல்விகளிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சியே தவிர வேறில்லை. தடுப்பூசி பற்றாக்குறை குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. மஹாராஷ்ட்ராவின் குறைபாடுள்ள அணுகுமுறை, வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் முயற்சிகளைத் தடுக்கிறது'' என விமர்சித்தார்.

 

தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம் குறித்து பேசிய அவர், "சத்தீஸ்கர், கடந்த 2-3 வாரங்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைக் கண்டுள்ளது. அவசரப் பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்ட போதிலும் சத்தீஸ்கர் அரசு கோவாக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த மறுத்துவிட்டது" எனக் குற்றஞ்சாட்டினார்.

 

இந்தநிலையில் தடுப்பூசி பற்றாக்குறையால், மஹாராஷ்ட்ரா முழுவதும் பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக மஹாராஷ்ட்ரா தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர், "மத்திய அரசின் புதிய தடுப்பூசி வழங்கும் உத்தரவின்படி, மஹாராஷ்ட்ராவுக்கு 7.5 லட்சம் தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்களுக்கு மஹாராஷ்ட்ராவை விட அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன" என்றார். இதனை சரிசெய்வதாகக் சுகாதாரத்துறை அமைச்சர் உறுதியளித்ததாகவும், அதற்கு இன்னும் காத்திருப்பதாகவும் மஹாராஷ்ட்ர சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார். மேலும் மத்திய அரசு ஏன் மஹாராஷ்ட்ராவுக்கு பாகுபாடு காட்டுகிறது எனக் கேள்வி எழுப்பிய அவர், "மஹாராஷ்ட்ராவின் மக்கள் தொகை, குஜராத்தின் மக்கள்தொகையை விட இரு மடங்காக உள்ளது. குஜராத்திற்கு ஒரு கோடி டோஸ் கிடைத்தால், எங்களுக்கும் ஒருகோடி டோஸ் கிடைக்கிறது" என அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் தங்களுக்கு மாதம், 1.6 கோடி தடுப்பூசி வேண்டுமென தெரிவித்தார்.

 

மஹாராஷ்ட்ராவை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்குப் பதிலடி தந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர், "கோவாக்சின் ஆய்வகப் பரிசோதனையில் இருந்தபோது அதனை நாங்கள் நிறுத்தினோம். அது சேமிக்கப்பட்டு வந்தது. எங்களிடம் கோவிஷீல்ட் சேமிப்பும் இருந்தது. ஆய்வகப் பரிசோதனை முடிந்ததிலிருந்து, சத்தீஸ்கரில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது அவருக்குத் தெரியவில்லை என்றால் அது துரதிருஷ்டமானது" எனக் கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வங்கி மோசடி புகார்; அஜித் பவார் மனைவி மீதான வழக்கு மூடிவைப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Closing the case against Ajitpawar's wife on Complaint of bank fraud

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதன்படி, மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே முதற்கட்டமாக மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனையடுத்து, மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வரும் 26ஆம் தேதி அன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாய் நடைபெற்ற வந்த நிலையில், இன்று (24-04-24) மாலை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 

மகாராஸ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஸ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில் தங்களுக்கே கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார், அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து, அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனத் தேர்தல் ஆணையம் அங்கிகரித்துள்ளது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் எனவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதே வேளையில், நடைபெறவிருக்கிற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா, பாராமதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். இதற்கிடையே, ரூ.25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை குற்றப்பிரிவு காவல்துறை நடத்தி வந்தது. இந்நிலையில், வங்கி மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சுனேத்ரா பவார் மீது எந்தவித ஆதாரம் இல்லை என்றும், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை எனவும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்பித்து வழக்கை மூடியுள்ளது.