Maha Kumbh Mela PM Modi takes holy dip in Triveni Sangam

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு இந்த மாதம் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கும்பமேளாவில், இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

இதுவரை 10 கோடிக்கும் மேலான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரயாக்ராஜில் உள்ள மகா கும்பமேளா க்ஷேத்ராவிற்கு படகு மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார். அப்போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உடன் இருந்தார். இதனையடுத்து திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடி தரிசனம் செய்தார். இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த 29ஆம் தேதி மௌனி அமாவாசை (Mauni Amavasya) அன்று புனித நீராட அதிகாலை முதலே லட்சக்கணக்கானோர் திரண்டதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.