மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த நிலையில் தங்களது ஆட்சியைக் கலைக்க பாஜக தொடர்ந்து முயன்று வருவதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து விலகினார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ க்கள் 22 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜினாமா செய்த 22 எம் எல்ஏக்களும் நாளைக்கு நேரில் ஆஜராக சபாநாயகர் பிரஜாபதி உத்திரவிட்டுள்ளார்.