Skip to main content

லஞ்சப் பணத்தை மென்று விழுங்கிய அரசு அதிகாரி... வைரல் வீடியோ! 

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

Madhya Pradesh official swallows Rs 5,000 bribe money viral video

 

அரசு அலுவலகங்களில் அவ்வப்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  அதேபோல், பொதுமக்கள் சிலரும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறையைத் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட நபர் குறித்து புகார் கூறுவர். பின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரும் இரசாயனம் தடவிய பணத்தை அதிகாரிகளிடமோ அல்லது அலுவலர்களிடமோ கொடுக்கும்போது அந்த இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மறைந்திருந்து அவர்களை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்வார்கள். தமிழ்நாட்டில் சில இடங்களில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வருகிறார்கள் என்று அறிந்ததுமே பணத்தை ஜன்னல் வழியாக வெளியே வீசி எறியும் சம்பவங்களும் நடைபெற்றதை நாம் படித்திருப்போம். இதையெல்லாம் விட மிக சுவாரஸ்யமான சம்பவம் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. 

 

மத்தியப்பிரதேசம் மாநிலம், கட்னி பகுதியைச் சேர்ந்தவர் சந்தன் சிங் லோதி. இவர் தனது நிலம் தொடர்பான விவகாரத்திற்காக கட்னி பகுதியில் உள்ள வருவாய் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு வருவாய்த்துறை அதிகாரியான கஜேந்திர சிங், என்பவர் சந்தன் சிங் லோதியிடம் ரூ. 5000 லஞ்சம் கேட்டுள்ளார். 

 

இதனைத் தொடர்ந்து சந்தன் சிங் லோதி, மத்தியப்பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் லோக்ஆயுக்தா சிறப்பு காவல்துறையிடம் இது தொடர்பாக புகார் கொடுத்தார். அந்தப் புகாரை ஏற்ற ஜபல்பூர் சிறப்பு காவல்துறையினர் சந்தன் சிங் லோதியை, கஜேந்திர சிங்கிடம் அவர் கேட்ட பணத்தை தரும்படி கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சந்தன் சிங் லோதி, 5,000 ரூபாயை கஜேந்திர சிங்கின் தனி அலுவலகத்தில் வைத்து அவரிடம் அந்தப் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு ஜபல்பூர் லோக்ஆயுக்தா சிறப்பு காவல்துறையினர் மறைந்திருந்ததை கஜேந்திர சிங் கண்டறிந்துள்ளார். அவர்களிடம் சிக்காமல் இருக்க தான் லஞ்சமாக வாங்கிய 5000 ரூபாயை உடனடியாக தனது வாயில் போட்டு அந்த நோட்டுகளை மென்று விழுங்கினார்.

 

இதனைக் கண்ட ஜபல்பூர் லோக்ஆயுக்தா சிறப்பு காவல்துறையினர் உடனடியாக அவரை அந்த மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர் மென்று விழுங்கிய 5,000 ரூபாய் மீட்டனர். மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் தற்போது விசாரணை நடந்துவருகிறது. மருத்துவமனையில் இருந்தவர்கள் இந்த நிகழ்வை தங்கள் கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று நேற்று (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.  தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறும்போது, “சிறுவனின் பெயர் மயூர். தனது நண்பர்களுடன் சேர்ந்து அறுவடை செய்த கோதுமை பயிரிடப்பட்ட வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். மற்ற குழந்தைகள் அவருக்கு உதவ முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால்  உடனடியாக மயூருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் 3.30 மணியளவில் ஸ்டேஷன் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் மீட்புப் பணியில் 2 ஜேசிபிகள், கேமராமேன்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு குழு பனாரஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. குழந்தையைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்யும். எம்எல்ஏ சித்தார்த் திவாரி அந்த இடத்தில் இருக்கிறார். குழந்தையை மீட்கும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.