மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் நேற்று மாலை போபாலில் உள்ள ஹமீதியா அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதன் பின் அவர் இன்று காலை 9 மணியளவில் திடீரென்று மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார். அவரது வலது கை விரலை மடக்கும் பொழுது அல்லது நீட்டும் பொழுது பிடிப்பது போன்று இருந்துள்ளது. அதே போல் விரலை மடக்கும் போதும், நீட்டும் போதும் முதல்வருக்கு வலியும் இருந்துள்ளது என அரசு மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் அவருக்கு விரலில் அறுவை சிகிச்சை செய்ததாகவும், அதன் பிறகு சில மணி நேரம் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்ததாகவும், இன்று மாலை மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்புவார் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதே வேளையில், மாநில காங்கிரஸ் ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் கூறும் பொழுது, பிற நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு அசவுகரியம் ஏற்படாமல் தவிர்க்க, கட்சி தொண்டர்கள் யாரும் தன்னை காண மருத்துவமனைக்கு வர வேண்டாம் என கமல்நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார் என கூறினார். அதே போல் மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் முதல்வர் கமல்நாத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் "நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்" என்றும் அரசு மருத்துவமனையில் நீங்கள் சிகிச்சை பெற்றது வரவேற்கத்தக்கது என்று கூறினார். சமூக வலைத்தளங்களில் பலரும் முதல்வர் கமல்நாத்துக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றன.
Show comments