Skip to main content

வாராக்கடன் எதிரொலி ! இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் உடன் லட்சுமி விலாஸ் வங்கி (LVB) இணைப்பு !

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

லட்சுமி விலாஸ் வங்கியில் (LVB- Lakshmi Vilas Bank) வாராக்கடன் (NPA) அதிகரித்துள்ளதால் இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிட் ( IBHFL - India Bulls Housing Finance Limited ) உடன் இணைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை ரிசர்வ் வங்கி (06/04/2019) அன்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இந்தியாவில் பல வங்கிகள் வாராக்கடன் (NPA) சுமையால் இணைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட "பாங்க் ஆப் பரோடா வங்கி" உடன் தேனா , விஜயா வங்கிகள் இணைப்பு நடைமுறைக்கு வந்தது. 

 

lvb



எனவே வருங்காலத்தில் இது போன்ற நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் இந்தியாவில் உள்ள வங்கிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. அதே சமயம் இந்திய வங்கிகள் அனைத்தும் பெரிய வங்கிகளாக உருவெடுத்து  வருகின்றது என்றால் மிகையாகாது. மேலும் வாராக்கடன் (NON - PERFORMING ASSET) "NPA" தொடர்பான தகவல்களை ரிசர்வ் வங்கியிடம் மற்ற தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து அளித்து வரும் நிலையில் இதற்கான நடவடிக்கையும் உடனடியாக ரிசர்வ் வங்கி எடுப்பது ஆச்சரியமாக உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதே போல் மத்திய அமைச்சரவை மற்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் ஏற்கெனவே ஒப்புதல் வங்கிகள் இணைப்புக்கு (Banks Merger) வழங்கியுள்ளதால் கடன் சுமையில் இயங்கும் வங்கிக்களை இணைக்க ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த வங்கிகளும் சிறப்பாக செயல்படவும் , கடன் சுமையில் இருந்து எளிதில் மீண்டு வரவும் ரிசர்வ் வங்கியின் வங்கிகள் இணைப்பு 
முடிவு பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

நன்றாக இயங்கும் வங்கிகள் + கடன் சுமையில் இருக்கும் வங்கிகள் = "வங்கிகள் இணைப்பு"


பி.சந்தோஷ் , சேலம் .
 

சார்ந்த செய்திகள்

Next Story

நாமக்கல் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
CM MK Stalin fulfilled the demand of the people of Namakkal 

நாமக்கல் மாவட்டம் கடந்த 1997 ஆம் ஆண்டு 2 வருவாய் கோட்டங்கள், 8 வட்டங்கள், 30 வருவாய் பிர்க்காக்களுடன் (Firka) உருவாக்கப்பட்டது. கடந்த 2011 ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகையின் எண்ணிக்கை 17 லட்சத்து 26 ஆயிரத்து 601 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் 169 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்ட பிற செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சங்கங்களையும் சேர்த்து மொத்தம் 816 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில், நாமக்கல் மாவட்டம், கோழிப்பண்ணை, லாரி பாடி பில்டிங், முட்டை உற்பத்தி, ஆமணக்கு எண்ணெய் பதப்படுத்தும் தொழில் ஆகிய பல முக்கிய தொழில்களுக்கு பெயர் பெற்றதாகும். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்டத்தில் 45 கிளைகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 29 கிளைகள் என மொத்தம் 74 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 98.70 கோடி ரூபாய் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 55.15 கோடி ரூபாய் பங்குத்தொகையுடன் இவ்வங்கி செயல்பட்டு வருகிறது. மேலும், 2020-21 ஆம் ஆண்டில் 22.17 கோடி ரூபாய், 2021-22 ஆம் ஆண்டில் 20.37 கோடி ரூபாய் மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 18.24 கோடி ரூபாய் என தொடர்ந்து லாபம் ஈட்டியுள்ளது.

இத்தகைய சூழலில் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டு பகுதியில் உள்ள நாமக்கல் மாவட்டதிற்கென ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதனைப் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதியும் மற்றும் பல்வேறு தொழில் துறையினர் பயன்பெறும் வகையிலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட முதலமைச்சர் ஆணையிட்டார். இந்நிலையில் இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கி இன்று (6.3.2024) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

வங்கியில் நூதன மோசடி; போலீஸ் தீவிர விசாரணை

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Bank scam in Trichy

திருச்சி ரேஸ் கோர்ஸ் ரோடு தாமஸ் தெரு பகுதியில் தனியார் இன்ஜினியரிங் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் இயக்குநர்களாக திருநாவுக்கரசு, பாஸ்கரன், சிவக்குமார், ஸ்ரீனிவாசன், அர்ச்சனா ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனத்தின் காசோலை மற்றும் கணக்கு வழக்குகளில் கையெழுத்திடும் அதிகாரம் திருநாவுக்கரசு மற்றும் பாஸ்கரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கிக் கணக்குகளை சரிபார்த்தபோது காசோலை கொடுக்காமல் ரூ.18,28,452 லட்சம் வேறு 2 கம்பெனி கணக்குகளில் வரவு ஆகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவன பொது மேலாளர் ஜெகநாதன் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளருக்குத் தகவல் தெரிவித்தார்.

பின்னர் நேரடியாகச் சென்று ஒப்புகைச் சீட்டு கேட்டபோது வங்கி மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகிய இருவரும் செல்போன் வாயிலாக மேற்கண்ட நிறுவனத்தின் டைரக்டர் ஸ்ரீனிவாசன் பேசுகிறேன் எங்களது வங்கிக் கணக்கிலிருந்து கீழ்க்கண்ட இரு வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 8,96,934 மற்றும் ரூ.9,31,518 ஆகிய தொகையை ஆர்.டி.ஜி.எஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஆர்டிஜிஎஸ் செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மர்ம நபர் ஒருவர் மேற்கண்ட நிறுவனத்தின் டைரக்டர் பெயரைச் சொல்லி நூதன மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜெகநாதன், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.