Skip to main content

எங்களைக் கொல்வதால் என்ன லாபம்? - காதல் ஜோடியின் உருக்கமான வீடியோ

Published on 19/07/2018 | Edited on 20/07/2018

காதல் எந்த எல்லைகளிலும் அடங்காத ஒப்பற்ற உணர்வு. இதைத்தான் காலங்காலமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது காதல் அதன் அழகிய வடிவிலேயே. ஆனால், சாதிகளாலும், மதங்களாலும் பிரிந்து கிடக்கும் இந்திய சமூகத்தில் காதல் சுதந்திரமான ஒன்றாக இருப்பதில்லை. காதலிப்பவர்களை, தடைகளைக் கடந்து மணமுடிந்தவர்களை இந்த சமூகத்தின் கறை நிறைந்த பக்கங்கள் சும்மா விடுவதில்லை. 
 

Harrison

 

 

 

கேரள மாநிலத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட கெவின் என்ற இளைஞர், பெண்ணின் பெற்றோர்களால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கெவின் படுகொலை ஏற்படுத்திய தாக்கம் குறையாத நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மதங்களைக் கடந்து திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி கொலை மிரட்டல்களைச் சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

 

 

ஹாரிஸன் எனும் கிறித்தவ இளைஞரும், சஹானா எனும் இஸ்லாமிய இளம்பெண்ணும் நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட இவர்கள், முகநூல் பக்கத்தில் மணக்கோலத்தில் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து, சில அடிப்படைவாத அமைப்புகள் இந்த ஜோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால், அச்சமடைந்த இவர்கள் செய்வதறியாமல் முகநூலில் தங்களது கவலையை முகநூல் பக்கத்தில் வீடியோ காட்சியாக பதிவிட்டுள்ளனர். 
 

kevin

கேரளாவில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கெவின்

 

 

உருக்கமான அந்த வீடியோ காட்சியில், நாங்கள் சாவதற்காக காதலித்து திருமணம் செய்யவில்லை. எஸ்.டி.பி.ஐ. போன்ற அமைப்புகள் எங்களை மிரட்டுகின்றன. நாங்கள் சேர்ந்து வாழவே விரும்புகிறோம். மதம் மாறும் எண்ணம் எங்கள் இருவருக்கும் கிடையாது. இருவரும் வற்புறுத்தவும் இல்லை. அப்படி இருக்கையில், எங்களைக் கொல்லப்போவதாக மிரட்டுவது எந்தவிதத்தில் நியாயம். எல்லாவற்றையும் கடந்து காதலித்து திருமணம் செய்துகொண்ட எங்களைக் கொல்வதால் உங்களுக்கு என்ன லாபம்? என கேள்வியெழுப்பியுள்ளனர். 
 

வீடியோவின் முடிவில் ஹாரிஸன், எங்கள் காதலை நிலைத்திருக்கச் செய்ய நாங்கள் வாழவே ஆசைப்படுகிறோம். கெவினைப் போல சாக எங்களுக்கு விருப்பமில்லை என குறிப்பிடுகிறார். அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.