ஒடிசா மாநிலத்தில் தற்போது பல்வேறு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்துவருகிறது. அந்த வகையில் இன்று ஒடிசாவில் மூன்றாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம், ஜிப்பூர் மாவட்டத்தில், பச்சாலா பஞ்சாயத்துக்குட்பட்ட வாக்கு மையங்களில் நுழைந்த மர்ம கும்பல், வாக்குப் பதிவு இயந்திரங்களை கைப்பற்ற முயன்றனர். இதுதொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த அந்தக் கும்பல் சிறை பிடித்தது. அதன் பிறகு செய்தியாளர்களை கட்டிவைத்து அவர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் செய்தியாளர்களை மீட்டு அங்கிருந்து அனுப்பிவைத்தனர். மேலும், அந்தக் கூட்டு வன்முறையில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே சமயம் ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மக்களவைத் தேர்தலுடன் ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. பிஜு ஜனதாதளம் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைப்பது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் ஓடிசாவில் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதாதளம் உடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் பா.ஜ.க. - பிஜு ஜனதா தளம் இடையே உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க.வின் நிபந்தனைகளை பிஜு ஜனதா தளம் ஏற்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதியிலும் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து ஒடிசா மாநில பா.ஜ.க. தலைவர் மன்மோகன் சமலின் எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும், மாநில சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒடிசாவில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது என்பது தெளிவாகியுள்ளது. அதே சமயம் இது குறித்து பா.ஜ.க. எம்.பி. அப்ரஜிதா சாரங்கி கூறுகையில், “அனைத்து தொகுதிகளிலும் எங்கள் (பா.ஜ.க.) வேட்பாளர்களை நிறுத்துவோம். 21 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 147 மாநில சட்டசபை தொகுதிகளில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த ஆற்றலும், மிகுந்த உற்சாகமும், தேர்தல் பணியின் மீது மிகுந்த ஆர்வமும் உள்ளது, எது நடந்ததோ அது நடக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த சரியான முடிவை எடுத்த அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான பிஜு ஜனதாதளம் 12 மக்களவைத் தொகுதிகளையும், பா.ஜ.க. 8 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தன. மேலும் பிஜூ ஜனதா தளத்துடன் பா.ஜ.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே ஒடிசாவில் மக்களவைத் தேர்தலை கடைசி 4 கட்டங்களாக நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2000 ஆம் ஆண்டு ஒடிசா கேடரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன் அம்மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்பு ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றிய வி.கே.பாண்டியன் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து வந்தார். சொல்லப்போனால் ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் வி.கே பாண்டியன் மிகுந்த செல்வாக்கு உள்ள நபராக பார்க்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு வி.கே.பாண்டியன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது. அதற்கு அடுத்தநாள் ஒடிசா மாநிலத்தின் கேபினெட் அமைச்சர் பதவிக்கு இணையான பதவியில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார். . ஒடிசா முதல்வருக்கு கீழ் நேரடியாக பணியாற்றும் வகையில் மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வி.கே பாண்டியன் பங்கேற்றிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் தக்காளியை வீசினார். பின்னர் தக்காளி வீசிய அந்த இளைஞரை பிஜீ ஜனதள தொண்டர்கள் கடுமையாக தாக்கி இழுத்துச் சென்றனர். காவல்துறை மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.