Skip to main content

பரபரப்பான நாடாளுமன்றம்; குடியரசுத் தலைவரை சந்திக்க எதிர்க்கட்சிகள் திட்டம்!

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
A lively Parliament; Opposition parties plan to meet the President

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக இரண்டு நபர்கள் திடீரென அத்துமீறி மக்களவைப் பகுதியில் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசியதாகக் கூறப்படுகிறது. மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர். அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ணப் புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர் மனோரஞ்சன், சாகர் ஷர்மா என்பது தெரியவந்தது. மேலும், இந்த 2 பேர் எவ்வித ஆவணமும் இன்றி நாடாளுமன்றத்திற்குள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு வெளியே பிடிபட்ட இருவரும் செல்போன், கைப்பை என எதையும் எடுத்து வரவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் நாடாளுமன்றத்துக்குள் நடந்த அத்துமீறல் தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உட்பட எந்த ஆவணமும் இன்றி நாடாளுமன்றத்துக்குள் இருவரும் நுழைந்தது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தியதற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தனர். இதனையடுத்து நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மறு ஆய்வு செய்யக் கோரியும், தீவிர கண்காணிப்பையும், பாதுகாப்பையும் அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார்.

A lively Parliament; Opposition parties plan to meet the President

இந்நிலையில் மக்களவையில் இருவர் அத்துமீறிய சம்பவம் மற்றும் நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு, நாளை (14.12.2023) காலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் முறையிட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக குடியரசுத் தலைவரை சந்திப்பது தொடர்பாக நாளை காலை நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்த முடிவு செய்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்