Skip to main content

ஒரு சின்ன தீப்பொறி; 12 ஆம்னி பேருந்துகள் எரிந்து நாசம்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

A little spark; 12 omni buses burnt down

 

வெல்டிங் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே நேரத்தில் 12 ஆம்னி பஸ்கள் பற்றி எரிந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வீரபத்திர நகரில் எஸ்.வி.கோச் என்ற தனியார் பேருந்து பாடி பில்டிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஊழியர்கள் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீப்பொறி பற்றிய நிலையில் முதலில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து தீயானது அருகருகே நின்றிருந்த பக்கத்து பேருந்துகளுக்கும் பரவத் தொடங்கியது.

 

இந்த விபத்தில் மொத்தமாக 12 ஆம்னி பேருந்துகள் தீயில் எரிந்து நாசமாகின. உடனடியாக சம்பவ இடத்திற்கு, ஏழுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தால் அங்கு கரும்புகை சூழந்தது. இதனால் அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் அச்சத்தில் உறைந்தனர். வெல்டிங் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 ஆம்னி பேருந்துகள் தீப்பிடித்து முழுவதும் எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர். 

Next Story

டெல்லியில் பயங்கர தீ விபத்து; பொதுமக்கள் பாதிப்பு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
fire in Delhi Public damage

டெல்லியில் உள்ள காஜிபூர் குப்பைக் கிடங்கில் நேற்று (21.04.2024) மாலை எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனால் தீயில் இருந்து தொடர்ந்து புகை கிளம்பி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குப்பைக் கிடங்கில் இருந்து விஷவாயு உற்பத்தியாகியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு தொண்டையில் எரிச்சல், புகையால் இருமல் வந்தது. இந்த தீயால் மாசு ஏற்பட்டது. இதனால் அனைவரும் அவதிப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார். மேலும் இது குறித்து உள்ளூரில் ஒருவர் கூறும்போது, “இன்று கண்விழித்து பார்த்தபோது அந்த பகுதி தெளிவாக தெரியவில்லை. சரியாக மூச்சு விட முடியவில்லை. கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. வெப்பம் அதிகரிக்கும் போது தீ விபத்துகள் தொடரும். அரசு இந்த பிரச்சனையை தீர்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், “டெல்லி மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு துறையினரும் தொடர்ந்து  தீயை அணைக்கும் பணியில் பணியாற்றி வருகின்றனர். தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா காஜிபூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.