Skip to main content

எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெற்றி; 3 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன! 

Published on 10/05/2022 | Edited on 10/05/2022


 

LIC wins IPO; 3 times the applications piled up!

 

பொதுப்பங்கு வெளியீட்டில் முதன்முதலாக களமிறங்கிய எல்.ஐ.சி நிறுவனத்திற்கு பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியீட்டு அளவை விட 2.95 மடங்கு அதிகமாக பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. 

 

இந்திய அரசு தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும் நிலையில், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்.ஐ.சி) பங்குகளையும் தனியாருக்கு விற்க முடிவெடுத்தது. இதற்கு ஊழியர்கள் சங்கங்கள், இடதுசாரிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், கொள்கை முடிவில் இருந்து இந்திய அரசு பின்வாங்கவில்லை. 

 

எல்.ஐ.சி பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்ட இந்திய அரசு உத்தேசித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ), என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ சந்தைகளில் மே 4- ஆம் தேதி தொடங்கியது.  

 

ரஷ்யா - உக்ரைன் போர், இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் மத்திய அரசுக்கும் இந்த வெளியீடு வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இருந்தது. அதனால், முதலீட்டாளர்களிடம் கிடைத்த வரவேற்பால் மத்திய அரசு உற்சாகம் அடைந்துள்ளது. முதல்கட்டமாக 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளைத் திரட்ட ஐபிஓ பங்குகளை வெளியிட்டுள்ளது. 

 

பங்குகள் கோரி விண்ணப்பிக்கும் அவகாசம் மே 4- ஆம் தேதி தொடங்கி மே 9- ஆம் தேதி முடிவடைந்தது. பங்கு முதலீட்டாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே எல்ஐசி பங்குகள் மீது ஆர்வம் காட்டினர். இதனால் கடந்த 6 நாள்களில் மொத்தம் 43933.50 கோடி ரூபாய்க்கு பங்குகள் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அதாவது வெளியீட்டு அளவை விட இது 2.95 மடங்கு அதிகம் ஆகும். 

 

பொதுப்பங்கு வெளியீட்டில் மொத்தம் 16.20 கோடி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் முதலீட்டாளர்களிடம் இருந்து 47.82 கோடி பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன.

 

எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கீட்டு விலையைக் காட்டிலும் 60 ரூபாய் தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது. அதனால் பாலிசிதாரர்களும் போட்டிப்போட்டு விண்ணப்பித்துள்ளனர். பாலிசிதாரர்களிடம் இருந்து மட்டும் 6.12 மடங்கு வரை, அதாவது 12,034 கோடி ரூபாய்க்கு பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. 

 

''இந்தியாவின் மும்பை, டெல்லி, ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்களைக் காட்டிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த பாலிசிதாரர்கள் அதிகளவில் எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். இதுபோன்ற சிறு நகரங்களில் எல்ஐசி முகவர்கள், பாலிசிதாரர்களுடன் ஆழமான உறவு வைத்திருப்பதையே காட்டுகிறது,'' என்கிறார் ஃபன்ட்ஸ் இண்டியா நிறுவனத்தின் சிஇஓ கிரிராஜன் முருகன். 

 

சில்லறை முதலீட்டாளர்கள் தரப்பில் இருந்து 12,456 கோடி ரூபாய்க்கு பங்குகள் கோரி விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 1.99 மடங்கிற்குக் கூடுதலாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. 

 

சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கு பொதுப்பங்கு வெளியீட்டு விலையில் இருந்து 45 ரூபாய் தள்ளுபடி சலுகை அளித்து உள்ளது. எல்ஐசி ஊழியர்கள் ஒருபுறம் பொதுப்பங்கு வெளியீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடினாலும் கூட, மறுபுறம் ஒதுக்கீட்டு அளவைக் காட்டிலும் 4.4 மடங்கு பங்குகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 

 

பங்குத்தாரருக்கு முதலீட்டாளர்களிடம் (கியூஐபி) இருந்து 2.83 மடங்கும், அமைப்பு ரீதியற்ற நிறுவன முதலீட்டாளர்களிடம் (என்ஐஐ) இருந்து 2.91 மடங்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதாவது, அவர்களிடம் இருந்து முறையே 10,635 கோடி ரூபாய்க்கும், 8,180 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. 

 

எல்ஐசி பொதுப்பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலை 902 - 949 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதன் அதிகபட்ச விலையில் (949 ரூபாய்) பங்குகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 

 

பங்கு ஒதுக்கீட்டுப் பணிகள் மே 12- ஆம் தேதி மேற்கொள்ளப்படும். ஒதுக்கீடு பெறாதவர்களுக்கு அவர்களின் முதலீட்டுத் தொகை, அவர்களின் வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும். தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு எத்தனை லாட் பங்குகள் ஒதுக்கப்பட்டன என்பது மே 16- ஆம் தேதி தெரிய வரும். மே 17- ஆம் தேதியன்று, எல்ஐசி ஐபிஓ, மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Congress struggles against the central government

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இத்தகைய சூழலில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கெனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், தற்போது ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 1993-94, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் நடைபெறுவதாக காங்கிரஸ் கங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக இந்திய ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்து வருவது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் என காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரூ. 11 கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய பான் (P.A.N.) எண்ணை பயன்படுத்தியதற்கு ரூ. 11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (30.03.2024) நாடு தழுவிய போராட்டம் நடத்த, அனைத்து மாநில தலைமையகம் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமையகங்களில் அனைத்து காங்கிரஸ் பிரிவுகளுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.

Congress struggles against the central government

இது குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய ஜனநாயகத்தை முறியடிக்கும் முறையான செயல்பாட்டினை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கும் சட்டவிரோத முயற்சி நடந்து வருகிறது. நேற்று (28.03.2024) ரூ. 1823.08 கோடி ரூபாய் செலுத்துமாறு வருமான வரித்துறையின் தகவல் தொழில்நுட்பத் துறையிடம் இருந்து புதிய நோட்டீஸ் வந்தது. ஏற்கனவே வருமான வரித்துறை காங்கிரசின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 135 கோடி ரூபாயை வலுக்கட்டாயமாக எடுத்துள்ளது.

இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த மோசமான தாக்குதலையும், முக்கியமாக மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில் கட்சி மீது வரிப்பயங்கரவாதத்தை சுமத்துவதையும் கருத்தில் கொண்டு, அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் நாளை (30.03.2024) அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில மற்றும் மாவட்ட தலைமையகத்தில் மாபெரும் பொது ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Petrol, diesel price reduction

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை (15.03.2024) காலை 06:00 மணி முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்கள், 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 102 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 94 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

முன்னதாக உலக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.